காங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிம்போக்கில் மிகப்பெரிய பாலம் அடித்துசெல்லப்பட்டது. இதனிடையே தொடர் மழையினால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் சாலைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கியால்ஷிங் மாவட்டத்திலும் நிலச்சரிவினால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சாலைகளை சீரமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நிலச்சரிவு மற்றும் மழையின் காரணாக வடக்கு சிக்கிமின் சங்தங் பகுதியில் சிக்கிய 300 சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்ட ராணுவத்தினர், தற்காலிக பாலம் மூலம் அவர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
குஜராத்: பிபர்ஜாய் புயலை தொடர்ந்து குஜராத்தில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா பகுதிகளில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக தனேரா தாலுகாவில் உள்ள பனாஸ்கந்தா பகுதியில் 126 மிமீ மழை பெய்துள்ளது.
அசாமில் 33,500 பேர் பாதிப்பு: அசாம் மாநிலத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமங்கள், வீடுகள் மண்ணில் சரிந்துள்ளன. இதனால் 33,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 142 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து 3 நாளாக கனமழை பெய்து வருகிறது. அஜ்மீரில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்தது. பாலி, ஜலேர் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 30 பேர் மீட்கப்பட்டனர்.
இமாச்சலில் 26 பேர் மீட்பு: இமாச்சலில் சுற்றுலா வந்த பயணிகள் கனமழை மற்றும் நிலச்சரி காரணமாக தர்மசாலாவில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள கரேரி பகுதியில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
The post சிக்கிமில் நிலச்சரிவு 300 சுற்றுலா பயணிகள் மீட்பு: 100 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.