×

பழையாறு துறைமுகத்தில் அகற்றிய உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் பொருத்த வேண்டும்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 10 வருடங்களுக்கு முன் பொருத்தப்பட்டிருந்த உயர் மின் கோபுர விளக்கை மீண்டும் பொருத்த வேண்டும் என்று பழையாறு மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து தினந்தோறும் 400 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 200 நாட்டு படகுகள் மூலம் 6,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். மேலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் துறைமுக வளாகத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்திலேயே சிறந்த துறைமுகமாகவும், இயற்கை துறைமுகமாகவும் இத்துறைமுகம் விளங்கி வருகிறது.

இந்த துறைமுக வளாகத்தில் கலங்கரை விளக்கம் போன்று அதிக மின்சக்தியை அளிக்க கூடிய உயர் கோபுர மின்விளக்கு வலைபின்னும் கூட கட்டிடத்துக்கு மேல் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் இரவு நேரங்களில் கடலுக்குள் சென்ற மீனவர்கள் மீண்டும் துறைமுகத்தை நோக்கி வருவது எளிதாக இருக்கும். இதேபோல் அதிகாலை நேரத்திலும் கடலில் இருந்தும் துறைமுகத்துக்கு வருவதற்கும் துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்வதற்கும் ஏற்ற வகையில் அமைந்திருந்தது. ஆனால் இந்த உயர் அழுத்த மின் விளக்கு அகற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. மேலும் துறைமுகமும் மின்விளக்குகள் இன்றி இருண்டு கிடக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் முக்கிய விளக்காக இருந்து வந்த உயர் கோபுர மின்விளக்கு அகற்றப்பட்டதால், மேலும் துறைமுகம் இருண்டு காணப்படுகிறது. எனவே துறைமுகத்தில் தொடர்ந்து ஒளிவீசி கொண்டிருந்த உயர் கோபுர மின்விளக்கை மீண்டும் பொருத்தி ஒளிரச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பழையாறு மீன் மற்றும் கருவாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் பொன்னையா தெரிவித்தார்.

The post பழையாறு துறைமுகத்தில் அகற்றிய உயர்கோபுர மின்விளக்கை மீண்டும் பொருத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Palayaru Harbor ,Kollidam ,Palaiyaru fishing harbor ,Palaiyaru harbor ,Dinakaran ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி