×

ஐடி, சிபிஐ, இ.டி தான் பாஜவின் தொண்டர் படை எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

புதுக்கோட்டை: ‘ஐடி, சிபிஐ, இ.டி தான் பாஜவின் தொண்டர் படை, எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் ஜல்லிக்கட்டு வழக்கில் வெற்றி பெற்று தந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமாண உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாட்டில் பாசிஸ்ட்கள் ஆளத் துடிக்கின்றனர். அதற்காக நேரடியாக எதையும் செய்ய முடியாமல் புறவாசல் வழியாக நுழையப் பார்க்கின்றனர்.

நாம் எப்போதும் நம் பாரம்பரியப்படி, வாடிவாசல் வழியாக நேரடியாக காளையை அடக்குவதைப் போல, நேரடியாக சந்திப்போம். ஆனால் பாசிஸ்ட் பாஜவினர் புறவாசல் வழியாக உள்ளே வர முயற்சிக்கின்றனர். பாஜ தன்னுடைய கிளைக் கழகமாக அதிமுகவை நடத்துகின்றனர். இங்கே ஒருவர் தன்னுடைய வேலையைத் தவிர எல்லாவற்றையும் செய்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொடுக்கும் கோப்புகளில் கையெழுத்திட வேண்டியதுதான் அவரது வேலை. ரப்பர் ஸ்டாம்ப்பாக செயல்பட வேண்டியவர் அவர். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள். திமுக இருக்கும் வரை அந்த முயற்சி ஒரு போதும் நடக்காது.

எத்தனை மோடிகள், அமித்ஷாக்கள், நட்டாக்கள் வந்தாலும், தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது. பாஜவின் தொண்டர் படையாக , அமலாக்கத் துறை (ஐடி), சிபிஐ, வருமான வரித்துறை (இ.டி) செயல்பட்டு வருகின்றது. அதுவும் தேர்தல் நேரத்தில் இவர்கள் வேகமாக செயல்படுகிறார்கள். பெரியார், அண்ணா, கலைஞரின் வழிவந்த நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம். இ.டி.க்கும் பயப்பட மாட்டோம். ரெய்டு எங்களுக்குப் புதிதல்ல. ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்திற்கு எதிராக அறிக்கை வெளியிட்டது. அது குறித்து எந்த விசாரனையும் செய்யவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பிய ராகுல் காந்திக்கு பதில் சொல்லாமல் அவரது பதவியைப் பறித்தார்கள்.

21 கோப்புகளில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். அதில் பெரும்பாலானவை முன்னாள் அமைச்சர்கள் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்குகள் மீதான நடவடிக்கைகள். இங்குள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், வேலுமணியின் மீதும் சோதனை நடத்தினார்களே, என்ன நடந்தது. கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் அந்த அடிமைகளின் எஜமானர்களையும் விரட்டியடிப்போம்.இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

The post ஐடி, சிபிஐ, இ.டி தான் பாஜவின் தொண்டர் படை எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CBI ,ET ,BJP ,Modis ,Amitshahs ,DMK ,Minister ,Udayanidhi Stalin ,Pudukottai ,Modi ,Amit Shah ,Dinakaran ,
× RELATED நிதி மோசடியை விசாரிக்க வருமான...