மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் புதுடெல்லி புறப்பட்டு செல்ல வேண்டிய ஏர்இந்தியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், அதில் செல்லவேண்டிய 142 பயணிகள் மாற்று விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானியின் விடுப்பினால் இந்த விமானம் ரத்தானதால், புதுடெல்லியில் இருந்து சென்னை வரும் ஏர்இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 6 மணியளவில் புதுடெல்லிக்கு ஏர்இந்தியா பயணிகள் விமானம் புறப்பட வேண்டும். இதில் செல்லவேண்டிய 142 பயணிகளும் தயார்நிலையில் இருந்தனர். எனினும், இந்த விமானத்தை இயக்க வேண்டிய விமானி திடீரென விடுப்பு எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாற்று விமானியும் ஏற்பாடு செய்ய முடியவில்லை.
இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் இருந்து புதுடெல்லி செல்லவேண்டிய ஏர்இந்தியாவின் ஏஐ-440 பயணிகள் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து பயணிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், புதுடெல்லி செல்லவேண்டிய அனைத்து பயணிகளும் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்திருந்தனர். இதனால் மாற்று ஏற்பாடாக 142 பயணிகளையும் விஸ்தாரா, இன்டிகோ விமானங்களில் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, இன்று காலை 10.05 மணியளவில் புதுடெல்லி செல்லும் ஏர்இந்தியாவின் ஏஐ-430 விமானம் முன்னதாகவே காலை 9.30 மணிக்கு புதுடெல்லி புறப்பட்டு செல்லும். அந்த விமானத்தில், ரத்து செய்யப்பட்ட விமானத்தில் மீதமுள்ள பயணிகள் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சென்னையில் இருந்து வழக்கமாக காலை 6 மணியளவில் புதுடெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம், அங்கிருந்து மீண்டும் காலை 10 மணியளவில் புறப்பட்டு, மதியம் 12.40 மணியளவில் சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்து சேரும். எனினும், இன்று காலை புதுடெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டதால், அங்கிருந்து சென்னை வரும் ஏர்இந்தியாவின் ஏஐ-429 விமானமும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சென்னை விமானநிலையத்தில் பரபரப்பு நிலவியது.
The post சென்னை விமானநிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம் திடீர் ரத்து: விமானி விடுப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.