×

ஒடுகத்தூரில் உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விவசாயியிடம் ₹16 ஆயிரம் அபேஸ்: கேமராவில் பதிவான ஆசாமிக்கு வலை

ஒடுகத்தூர், ஜூன் 18: ஒடுகத்தூரில் உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விவசாயியிடம் ₹16 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம ஆசாமியை கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(62), விவசாயி. இவர் 7 பசுமாடுகளை வைத்து பால் வியாபாரமும் செய்து வருகிறார். ஒடுகத்தூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செல்வம் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று செலவிற்காக வங்கியின் அருகிலுள்ள ஏடிஎம் மையத்துக்கு பணத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மர்ம நபரிடம் பணத்தை எடுக்க உதவும்படி கேட்டுள்ளார். அவர் செல்வத்தின் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுக்க 4 இலக்க ரகசிய குறியீட்டை கேட்டுள்ளார். செல்வமும் அந்த ரகசிய குறியீட்டை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் மிஷினில் ஏதோ பிரச்னை உள்ளது எனவே பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறிய அந்த நபர் ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

சிறிது நேரத்திற்கு பிறகு பார்த்தபோது அந்த மர்ம ஆசாமி ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்துவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் உடனடியாக வங்கிக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினார். ஆனால், உங்களது வங்கி கணக்கு புத்தகம் கொண்டு வந்தால் கார்டை லாக் செய்து நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளனர். இதையடுத்து, செல்வம் வீட்டிற்கு சென்று வங்கி கணக்கு புத்தகத்தை எடுத்து வந்தார். ஆனால் அதற்குள் செல்வத்தின் ஏடிஎம் கார்டில் இருந்து ₹16 ஆயிரம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பழநிமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். முதற்கட்ட விசாரணையில் ஏடிஎம் கார்டை கொண்டு சென்ற மர்ம ஆசாமி குருவராஜபாளையத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து ₹16 ஆயிரத்தை எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. அதன்படி ஒடுகத்தூர் ஏடிஎம் மையத்திலும், குருவராஜபாளையத்தில் உள்ள ஏடிஎம் மையத்திலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஒடுகத்தூரில் உதவுவது போல் நடித்து ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விவசாயியிடம் ₹16 ஆயிரம் அபேஸ்: கேமராவில் பதிவான ஆசாமிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Odugathur ,Asami ,Odugattur ,Odugatore ,Odugatur ,
× RELATED உத்திர காவிரி ஆற்றில்...