சென்னை :சென்னை நீலாங்கரையில் உள்ள அரங்கத்தில் 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்கினார். அதன்படி முதல் இடம் பிடித்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் காசோலையாக வழங்கப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்ற திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்து கவுரவித்தார் நடிகர் விஜய்.
இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், “பொதுத் தேர்வில் சாதனை படைத்த நண்பா, நண்பிகளுக்கு எனது வணக்கம். பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல் உணர்கிறேன். நான் படிக்கும் போது சுமாரான மாணவராகதான் இருந்தேன். எனது கனவு சினிமாவாகதான் இருந்தது.வருங்கால இந்தியாவின் எதிர்கால சக்திகளாகிய மாணவர்களை காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். “‘படிப்ப மட்டும் உங்கிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது..’ இது என்ன ரொம்ப பாதிச்ச வசனம்; அப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கல்விக்கு என் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதற்கான நேரம்தான் இது..இது போன்ற நிகழ்ச்சிகளில் படிப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது.படிப்பை தவிர்த்து பார்த்தால் குணம், சிந்தனை திறன் மட்டுமே மாணவர்களுக்கு எஞ்சி இருக்கும்.பணத்தை இழக்கலாம்.
குணத்தை இழக்கக்கூடாது.பெற்றோர் கண்காணிப்பில் இருந்து வெளியே போகும் போது கிடைக்கும் சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துங்கள்.ஜாலியாக இருங்கள் . நம் வாழ்க்கை நம் கையில் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள். சமூக வலைத்தளத்தில் தவறான செய்தி பரப்புவோருக்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கும்.பாடப் புத்தங்களை தாண்டி மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளுங்கள். நாளைய வாக்காளர்களே நம் கையை வைத்து நம் கண்ணையே குத்தும் செயல்தான் தற்போது நடக்கிறது. காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது என்பது மிகவும் தவறானது. வாக்குக்காக பணம் வாங்க வேண்டாம் என பெற்றோர்களுக்கு சொல்லுங்கள். தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு வெற்றி பெற்ற மாணவர்கள் ஆறுதல் கூற வேண்டும்,”என்றார்.
The post படிப்பை மட்டும் உங்ககிட்ட இருந்து எடுத்துக்கவே முடியாது.. அசுரன் வசனத்தை பேசி மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை!! appeared first on Dinakaran.