×

திருச்சி அருகே சுகாதாரம், பாதுகாப்பு இல்லை தனியார் நர்சரி பள்ளிக்கு சீல்

திருச்சி, ஜூன்17: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம், கோப்பு கிராமத்தில் ஒரு தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது, கொரோனா காலத்திற்கு பின் பள்ளி மாணவர்களின் வருகை மிகவும் குறைந்துள்ள நிலையில் மழலையர் பள்ளிக்கான முன் அனுமதி பெறாமல் போதிய வசதிகள் இன்றி பள்ளியை நடத்தி வந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கடந்த 5-ம் தேதி பள்ளியை நேரடியாக பார்வையிட்டார். ஏற்கனவே வழங்கப்பட்ட அங்கீகாரம் புதுப்பித்தல் ஆணையில், இப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எந்தவித சுகாதாரமும், பாதுகாப்பும் இல்லாத சூழல் கருதி, துறை அனுமதி பெற்று புதிய கட்டிடத்திற்கு பள்ளியை மாற்ற வேண்டும்.

அல்லது தற்பொழுது உள்ள இடத்திலேயே ஆஸ்பெஸ்டாஸ் நீக்கப்பட்டு கான்கிரீட் கட்டடம் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அடிப்படை வசதிகள் இல்லாமல் கோயில் இடத்தில் இயங்கி வந்த தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியை மூட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சந்திரசேகரன் தலைமையில் வருவாய் மற்றும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் நேற்று பள்ளியை மூடி சீல் வைத்தனர். இப்பள்ளியில் படித்து வந்த 38 மாணவ, மாணவிகளையும் அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க இப்பள்ளி தாளாளரே நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

The post திருச்சி அருகே சுகாதாரம், பாதுகாப்பு இல்லை தனியார் நர்சரி பள்ளிக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Tiruchi ,Kopi village ,Andanallur ,
× RELATED திருச்சி பீம நகரில் வாலிபர் திடீர் மாயம்