×

வழக்கறிஞரை தாக்கிவிட்டு வழக்கு விசாரணைக்கு வந்தவரை இழுத்துச் சென்ற போலீசார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் மகன் தமிழ்ச்செல்வன்(24). பெயிண்ட்டரான தமிழ்செல்வன் மீது அடிதடி, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்ச்செல்வனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேந்திரன் என்பவருக்கும் 2019ல் ஏற்பட்ட அடிதடி வழக்கும், 2020ல் மகேந்திரனை கொலை செய்த வழக்கும் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக மூன்று வாய்தாவுக்கும் ஆஜராகாததால் கடந்த 2022 டிசம்பர் மாதம் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் திருவள்ளூர் குற்றவியல் நடுவர் எண் 2ல் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் தமிழ்செல்வனை, வழக்கறிஞர் ராஜசேகரன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், பிடி வாரண்டை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணைக்காக காத்திருந்தனர். பிற்பகல் 12.30 மணியளவில் தமிழ்ச்செல்வனுக்கு பசி எடுத்ததால் அவருக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி கொடுப்பதற்காக ராஜசேகரனின் ஜூனியர் வழக்கறிஞர் ஆனஸ்ட்ராஜ் (எ) வினோத்குமார் நீதிமன்றத்தில் இருந்து பிரதான சாலைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நீதிமன்றம் அருகே காத்திருந்த 10 பேர் தாங்கள் சிறப்பு பிரிவு போலீசார் என்று கூறி தமிழ்ச்செல்வனை இழுத்துச் செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது வழக்கறிஞர் ஆனஸ்ட்ராஜ் (எ) வினோத்குார் நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு ஒன்றுக்காக ஆஜர்படுத்த அழைத்து வந்திருப்பதாகவும் தற்போது ஏன் இவரை அழைத்துச் செல்கிறீர்கள் என கேட்டதால், போலீசாருக்கும் வழக்கறிஞருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து வழகிகறிஞரை கீழே தள்ளிவிட்டு தமிழ்செல்வனை அடையாளம் தெரியாத 10 பேர் தரதரவென இழுத்துச் சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வழக்கறிஞர்கள் ஆனஸ்ட்ராஜ் (எ) வினோத்குமார் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த போது, வேறொரு வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருப்பதால் போலீசார் இழுத்துச் சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வழக்கறிஞரை தாக்கிவிட்டு வழக்கு விசாரணைக்கு வந்தவரை இழுத்துச் சென்ற போலீசார் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Vijayan ,Tamidusselvan ,Thiruvallur district ,Thirunanavur ,Tamichelvan ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்