காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்வு செய்யப்பட்ட 41 பட்டதாரிகளுக்கு, பணி நியமன ஆணையை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.தமிழ்நாடு அரசு, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், அரசு துறை வேலைவாய்ப்பிற்கு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளையும், தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு தனியார் நிறுவனங்களை அழைத்து வேலை வாய்ப்பு முகாம்களையும் நடத்தி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறது.
இதற்காக, தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமானது, மாதம் ஒருமுறை 3வது வெள்ளிக்கிழமையும், ஆண்டுக்கு ஒருமுறை பெரிய அளவிலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில், 18 தனியார் நிறுவனங்கள் 1520 காலிப்பணியிடங்களுடன் கலந்துகொண்டு, தங்களுக்கான மனிதவள தேவைக்கு ஆட்கள் தேர்வு செய்தனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில், பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் 406 பேர்கள் கலந்து கொண்டனர்.
இம்முகாமினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார். பின்னர், முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களில், 41 பட்டதாரிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கினார். மேலும், 39 நபர்கள் முதல் கட்ட நேர்முக தேர்வில் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கான இரண்டாம் கட்ட நேர்முக தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை இணை இயக்குனர் செய்திருந்தார்.
The post வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான பட்டதாரிகளுக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.