டெல்லி: பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு நீக்கப்பட்டதற்கு சிறுமியின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளின் புகாரின் பேரில் பாஜக எம்.பி. மீது வழக்கு பதிந்திருந்த போலீசார், நேற்று அங்குள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பெண்ணை மானபங்க படுத்துதல், விரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாக்சி மாலிக், இளம் வீராங்கனையான சிறுமியின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியே பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு நீக்கப்பட காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். சிறுமி மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் அளித்திருந்த போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் போக்சோ வழக்கை திரும்ப பெறும் நிலை ஏற்பட்டிருக்காது என்று சாக்சி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மேலும் பல வீராங்கனைகள் புகார் அளிக்க முன்வந்திருப்பார்கள் என்றும் அப்போது தெரிவித்தார். தங்களின் பிற கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிய பிறகு இந்த பிரச்சனையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்று சாக்சி மாலிக் தெரிவித்துள்ளார்.
The post பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் மீதான போக்சோ வழக்கு நீக்கப்பட்டதற்கு சிறுமியின் குடும்பத்துக்கு கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம்: வீராங்கனை சாக்சி மாலிக் கருத்து appeared first on Dinakaran.