×

பூந்தமல்லியில் பரபரப்பு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 30 கம்ப்யூட்டர் எரிந்து நாசம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில், தனியார் கட்டுமான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பூந்தமல்லி மாங்காடு செல்லும் சாலையில், குமணன்சாவடியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் கீழ் தளத்தில் மத்திய அரசு வங்கியும், முதல் தளத்தில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று தனியார் கட்டுமான அலுவலகத்தின் ஏசியிலிருந்து ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, அலுவலகத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை கண்டதும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் அலுவலகம் முழுவதும் தீ பரவி புகை அதிக அளவில் பரவ ஆரம்பித்தது.

தகவல் அறிந்த மதுரவாயல், பூந்தமல்லி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் அலுவலகத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், டேபிள், சேர், ஆவணங்கள் உள்ளிட்டவை முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் அலுவலகத்திற்கு கீழ் தளத்தில் இயங்கி வரும் வங்கிக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து, பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post பூந்தமல்லியில் பரபரப்பு தனியார் கட்டுமான நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து: 30 கம்ப்யூட்டர் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Mangadu, ,Kumananchavadi ,
× RELATED மதுரவாயல் அருகே பரபரப்பு பழைய விளையாட்டு உபகரணங்கள் கிடங்கில் தீ