புதுடெல்லி: திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ் ஒன்றிய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு விற்கப்படும் அரிசி, கோதுமையை நிறுத்தியதால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஏழைகளுக்கு இலவச அரிசி, கோதுமை வழங்கும் மாநில அரசுகளின் திட்டத்திற்கு திறந்த சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு தானியங்களை விற்பனை செய்தது. தற்போது அதை நிறுத்தி விட்டதாக ஒன்றிய அரசு சார்பில் இந்திய உணவு கழகம் அறிவித்து இருக்கிறது. இதனால் கர்நாடகாவில் அடுத்த மாதம் முதல் 10 கிலோ இலவசஅரிசி விநியோக திட்டம் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,’கர்நாடகாவில் காங்கிரஸ் அரசிற்கு இந்திய உணவு கழகம் மூலம் அரிசி விற்கப்படுவதை ஒன்றிய அரசு மறுத்ததால், ஏழைகளுக்கு எதிரான மோடியின் நிலைப்பாடு அம்பலமாகியுள்ளது. பாஜவுக்கு வாக்களிக்காவிட்டால் கர்நாடகாவுக்கு மோடியின் ஆசிர்வாதம் கிடைக்காது என்று பாஜ தலைவர் நட்டா கூறியதன் அர்த்தம் இதுதானா? வெளிச்சந்தை விற்பனைத் திட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு கோதுமை மற்றும் அரிசி விற்பனையை நிறுத்துமாறு இந்திய உணவு கழகத்தை நிர்ப்பந்திப்பதன் மூலம், சமூகத்தின் மிகவும் பின்தங்கிய ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்’ என்றார்.
காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தனது டிவீட்டில், ‘‘கேள்வி என்னவென்றால் – ஏழைகளுக்கு உணவு தானியங்களை மறுக்கும் அளவுக்கு பிரதமரும் பாஜவும் தங்கள் தோல்வியால் கண்மூடித்தனமாக இருக்க முடியுமா? கன்னடர்கள் பதில்களைக் கோருகிறார்கள். மாநிலங்களுக்கு அரிசி விற்கக்கூடாது. ஆனால் வணிகர்களுக்கு சந்தை திறக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு அரிசி வழங்காமல் மோடி அரசும், பாஜவும் உதவத் தேடும் பெரும் வணிகர்களின் கூட்டமைப்பு எது’’ என்று கேள்வி எழுப்பினார்.
The post மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனைக்கு தடை; ரேஷனில் இலவச உணவு தானிய சப்ளை பாதிக்கப்படும்: ஒன்றிய அரசு முடிவுக்கு காங்கிரஸ் விளாசல் appeared first on Dinakaran.