×

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பம்

பிர்மிங்காம்: இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. உலக கோப்பைகள் நடத்துவதற்கு முன்பு பிரபலமாக இருந்தது, ‘ஆஷஸ்’ தொடர் எனப்படும் சாம்பல் டெஸ்ட் தொடர், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே 1882ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடர் இதுவரை 72முறை நடந்துள்ளது. அவற்றில் ஆஸி 34, இங்கிலாந்து 32 தொடர்களை வென்றுள்ளன. எஞ்சிய 6 தொடர்கள் டிராவில் முடிந்தன. டிராவில் முடிந்தாலும், அதற்கு முந்தைய தொடரை யார் வென்று இருந்தார்களோ அவர்களுக்கே ஆஷஸ் கோப்பை வழங்கப்படுவது வாடிக்கை.

கடந்த 3 தொடர்களை வென்றுள்ள ஆஸி அணியும், இங்கிலாந்தும் 73வது தொடரில் இப்போது களம் காண உள்ளன. மொத்தம் 5 டெஸ்ட்களை கொண்ட இந்த தொடரின் முதல் டெஸ்ட் இன்று பிர்மிங்காமில் தொடங்குகிறது.இது ஸ்டோக்ஸ் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் ஆஷஸ் தொடர். இரண்டு அணிகளும் முதல் 2 டெஸ்ட் ஆட்டங்களுக்கான அணிகளை மட்டும் அறிவித்துள்ளன. உள்ளூரில் நடக்கும் தொடரில் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, ஆண்டர்சன் ஸ்டூவர்ட், பேர்ஸ்டோ, கிரெவ்லி, ஒல்லி ராபின்சன், டக்கெட், வோக்ஸ், மார்க் வுட் என பலரும் கலக்க காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியனான உற்சாகத்தில் களம் காணும் ஆஸியிலும் கேப்டன் கம்மின்ஸ், வார்னர், ஸ்மித், டிராவிஸ், போலந்து, அலெக்ஸ் கேரி, கேமரான், ஹசல்வுட், கவாஜா, லயன் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. வெற்றிக்கு இரண்டு தரப்பும் வரிந்து கட்டும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

The post இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையே ஆஷஸ் தொடர் இன்று ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Ashes ,England ,Australia ,Birmingham ,Ashes Test ,World Cups ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை