சென்னை: மாற்றுதிறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்து, அவர்களை தமிழக முதல்வரால் ஊக்குவித்து கவுரவிக்கப்படுவதால், அதனை கண்டு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணிபுரிபவர்கள் மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, விருதுகள் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா அன்று வழங்கப்பட உள்ளன.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ. 50,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர்-10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம்-10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளர்-10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ். சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி- 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த விருதுகளுக்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலகம், வடசென்னை மாவட்டம், சிங்கார வேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை அவரிடம் இருந்து பெற்று பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், “https://awards.tn.gov.in” என்ற வலைத்தளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தென்சென்னை மாவட்டத்திற்கு 044- 24714758 என்ற தொலைபேசி எண்ணிலும், வடசென்னை மாவட்டத்திற்கு 044-29993612 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளலாம். இந்த விருதுக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு விருதுகள் சுதந்திர தின விழா நிகழ்வில் தமிழக முதல்வரால் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post மாற்றுதிறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள் மாநில அளவிலான சிறப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.