சென்னை: மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் சேகர்பாபு, கொறடா கோவி செழியன் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், நீதிமன்ற காவலில் இருப்பதால் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள செந்தில்பாலாஜியின் குடும்பத்தினரை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது.
செந்தில் பாலாஜியின் உறவினர்களை சந்தித்து உடல்நிலை குறித்து விசாரித்தோம். மேலும் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம். புழல் சிறை நிர்வாகம் அனுமதி கொடுத்தால் மட்டுமே செந்தில்பாலாஜியை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு விரைவாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்க இயக்குனரகம் சோதனை நடத்திய நிலையில், நேற்று நள்ளிரவில் கைது செய்திருக்கிறது. இதனிடையே நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
The post நீதிமன்ற காவலில் இருப்பதால் மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.