×

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 20ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவாரூர், ஜூன் 15: நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் பகுதியில் இயங்கி வரும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடப்பாண்டிற்கு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால், கலந்தாய்விற்கான விண்ணப்பங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 20ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். மேலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 8-ம் வகுப்பு மற்றும் 10- ம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள், தொழிற்பிரிவுகள், இவற்றிற்கான கல்வித் தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு ஆகியவை இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதளத்தில் கொடுத்துள்ள அறிவுரைகளை கவனமாக படித்து புரிந்துக்கொண்டு விண்ணப்பதை பூர்த்திசெய்து அதே இணையதளத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மாணவர்கள் தங்களது விண்ணப்பத்தை இணைய தள வசதி உள்ள மையங்கள் மற்றும் அரசு இ சேவை மையங்கள் மற்றும் அனைத்து அரசு தொழிற் பயிற்சி நிலையத்திலிருந்தும் சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பத்தில் எந்த மாவட்டத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ள விரும்புகிறார்கள் என்ற விவரம் குறிப்பிட வேண்டும். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பாடப்புத்தகங்கள், காலணி மற்றும் பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும். இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற்பிரிவை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் இது தொடர்பான விரிவான விவரங்களுக்கு நீடாமங்கலம் மற்றும் கோட்டூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர 20ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Government Vocational Training Institute ,Tiruvarur ,Needamangalam ,Kotur ,Government Vocational Training Center ,
× RELATED சாத்தூரில் உள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அழைப்பு