×

குடிக்க பணம் கேட்டதால் ஆத்திரம் பீர்பாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை: நண்பன் கைது

வேளச்சேரி: குடிக்க பணம் கேட்டவரை பீர்பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் கோவிலம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளச்சேரி அருகே எஸ்.கொளத்தூர், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மனோகரன் (45). இவர், அங்குள்ள ஒரு பழைய பேப்பர், இரும்பு மற்றும் கழிவுபொருட்களை விற்கும் காயலான் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் லூசு (எ) கண்ணன் (28). இவர், அப்பகுதியில் பழைய குப்பைக் கழிவுகளை சேகரித்து, அதில் இருக்கும் இரும்பு, பிளாஸ்டிக் கழிவு பொருட்களை மனோகரன் வேலை செய்யும் கடையில் விற்பது வழக்கம். இதனால் இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்தி லூசு (எ) கண்ணன் தரும் பழைய பொருட்களுக்கு மனோகரன் சில சமயங்களில் பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள பேக்கரி அருகே மனோகரன் சென்றார். அப்போது சாலையோரத்தில் லூசு (எ) கண்ணன் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி, மது குடிக்க மனோகரன் பணம் கேட்டுள்ளார். ஏற்கனவே, பழைய பொருட்களை விற்றதற்கான பணம் தராமல் மனோகரன் ஏமாற்றி வந்ததும், தற்போது தன்னிடமே குடிக்க பணம் கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், கீழே கிடந்த பீர்பாட்டிலை உடைத்து மனோகரன் வயிற்றில் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தவாறு, ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மனோகரனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகலவறிந்த பள்ளிக்கரணை போலீசார் விரைந்து வந்து, மனோகரனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை தலைமறைவாக இருந்த லூசு (எ) கண்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post குடிக்க பணம் கேட்டதால் ஆத்திரம் பீர்பாட்டிலால் குத்தி தொழிலாளி கொலை: நண்பன் கைது appeared first on Dinakaran.

Tags : Laborer ,Velachery ,Kovilambakkam ,Dinakaran ,
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...