×

அடுக்குமாடி குடியிருப்பு, தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 3 புரோக்கர்கள் சிக்கினர்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் தங்கும் விடுதியில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய 3 புரோக்கர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை விருகம்பாக்கம் தாங்கல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர்கள் அடிக்கடி வந்து செல்வதாக விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் பிரபுக்கு புகார்கள் வந்தன.

அதன்படி போலீசார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் வந்து சென்றதை கவனித்த போலீசார், உடனே குடியிருப்பில் உள்ள வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்திய போது, இளம்பெண் ஒருவரை வைத்து திருச்சி மரக்கடை, மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலியல் புரோக்கர் ஸ்டீபன் (31), மேற்கு தாம்பரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த கோபால் (27) அகியோர் பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக 2 புரோக்கர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இளம்பெண்ணை மீட்டனர். அதேபோல், மணப்பாக்கம் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்த பாலியல் புரோக்கர் இளவரசன் (30) என்பவரை விபசார தடுப்பு பிரிவு -2 இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். தப்பி ஓடிய மற்றொரு பாலியல் புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த இரண்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 3 இளம்பெண்களும் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்கள் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

The post அடுக்குமாடி குடியிருப்பு, தங்கும் விடுதியில் பாலியல் தொழில் நடத்திய 3 புரோக்கர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…