×

கருங்குழியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

மதுராந்தகம்: தினகரன் செய்தி எதிரொலியாக கருங்குழியில் கிடப்பில் போடப்பட்ட, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் சென்னை – திருச்சி ரயில் பாதை உள்ளது. இந்த வழியாக சென்னையில் இருந்து, பாண்டிச்சேரி, விழுப்புரம், திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக, இந்த பாதையில் அவ்வப்போது ரயில்கள் சென்று வருகின்றன. எனவே, கருங்குழி பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி ரயில்வே கேட் மூடப்படுவது வழக்கம்.

இதனால், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய கருங்குழி பகுதியில் இருந்து கிணார், ஏறுவாக்கம், திருக்கழுக்குன்றம், கே.கே.புதூர், இருசாமநல்லூர், தச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் லாரிகள், பஸ்கள் போன்றவை நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை தவிர்க்க அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி பல மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின்னர், தொடங்கிய வேகத்தில் குறிப்பிட்ட அளவிலான ஒரு பகுதி கட்டுமானம் மட்டுமே கட்டப்பட்டது. அதன்பிறகு, நடைபெற வேண்டிய இருபுறத்திலும் அமைக்க வேண்டிய மேம்பால இணைப்பு சாலை பணிகள் அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக கட்டப்படாமல் உள்ள இந்த மேம்பால கட்டுமான பணிகளை அதிகாரிகள் விரைந்து முடித்தால் இப்பகுதி போக்குவரத்து மிக எளிதாக இருக்கும். பல வருடங்களாக இந்த ரயில்வே இருப்பு பாதையின் அருகே இரு புறங்களிலும் ரயில்கள் செல்லும் வரை காத்து கிடக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும். அவர்கள் விரைவாக தங்கள் பயணத்தை மேற்கொள்ள இந்த மேம்பாலம் வசதியாக அமையும்.

எனவே, இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் மேம்பால இணைப்பு சாலை கட்டுமான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால், அவ்வழியாக பயணிக்கும் பயணிகள், கிராம பொதுமக்கள் விவசாயிகள் என பல தரப்பினரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post கருங்குழியில் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி மீண்டும் துவக்கம்: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Karunkuzhi ,Madhuranthakam ,Dhinakaran ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகள்...