×

தலைமை ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோருடன் திடீர் போராட்டம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து, வகுப்புகளை புறக்கணித்து பள்ளி மாணவ- மாணவிகள், பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எடையார்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்ட நிலையில், இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஜெயந்தி, இந்த கல்வியாண்டு வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பள்ளி தலைமையாசிரியை இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி, மாணவ – மாணவிகள், பெற்றோருடன் கடந்த திங்கட்கிழமை அன்று காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர். இதனையடுத்து, பள்ளி தலைமையாசிரியை பணி இடமாற்றம் செய்வதை கண்டித்து, பள்ளி மாணவ – மாணவிகள் வகுப்பை புறக்கணித்து, பெற்றோருடன் இணைந்து நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சுங்குவார்சத்திரம் போலீசார், கல்வித்துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, இதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, பள்ளி மாணவர்கள், பெற்றோர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post தலைமை ஆசிரியை இடமாற்றத்தை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் பெற்றோருடன் திடீர் போராட்டம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,panchayat ,Headmistress ,
× RELATED ஸ்ரீபெரும்புதூரில் கொள்முதல்...