×

முட்டத்தில் பரபரப்பு; ஆளில்லாமல் மிதந்த வள்ளம்

* மீனவர் தவறி கடலில் விழுந்தாரா?
* மரைன் போலீசார் விசாரணை

குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடலில் ஆளில்லாமல் மிதந்த வள்ளத்தால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வள்ளத்தில் சென்ற மீனவர் தவறி விழுந்தாரா? என்று மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மேற்கு கடற்கரையில் விசைப்படகுகளுக்கு கடந்த 1ம் தேதி முதல் 60 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விசைப்படகுகள் கடந்த 14 நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் வழக்கம்போல் மீன் பிடித்து வருகின்றன. இன்று காலை வழக்கம்போல் அழிக்கால் மீனவர்கள் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஆளில்லாமல் ஒரு வள்ளம் கடலில் தனியாக மிதந்து சென்றது. இதனை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தனியாக மிதந்து சென்ற வள்ளத்தை மீட்டனர். தொடர்ந்து முட்டம் மீன் பிடித்துறைமுகத்தில் கரை சேர்த்தனர்.

தனியாக மிதந்த வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் யார்? அவர் தவறி கடலில் விழுந்தாரா? அவர் கதி என்ன? என்று மீனவர்கள் துப்பு துலக்கினர். இந்த தகவல் அறிந்ததும் குளச்சல் சப் – இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் மீட்கப்பட்ட வள்ளம் முட்டம் ஓடைத்தெருவை சேர்ந்த மரியதாசன் (57) என்பவருக்கு சொந்தமானது என்றும், மீன் பிடிக்க சென்ற அவர் கரை திரும்பவில்லை என்றும் தெரிய வந்தது. அவர் வள்ளத்திலிருந்து தவறி விழுந்து மாயமாகி உள்ளார். உடனே உறவினர்கள் வேறு வள்ளம், விசைப்படகுகளில் சென்று அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். வள்ளத்திலிருந்து மீனவர் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post முட்டத்தில் பரபரப்பு; ஆளில்லாமல் மிதந்த வள்ளம் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Kanyakumari ,Muttam ,Vallam ,Dinakaran ,
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது