×

ஜல்லிக்கட்டில் 20 ஆண்டாக கலக்கிய திருச்சி பரட்டை காளை உயிரிழந்தது

திருச்சி: திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் விசு. இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வந்தார். இந்த காளையை அனைவரும் செல்லமாக “பரட்டை” என்று அழைத்து வந்தனர். இந்த காளையை தங்கள் குழந்தைகளில் ஒருவராகவே பாவித்து விசு, அவரது குடும்பத்தினர் வளர்த்து வந்தனர்.

இந்த பரட்டை காளை, உலக புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர், அவனிபுரம், பாலமேடு மற்றும் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர் மாவட்டங்களில் நடந்த பல்வேறு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து பரிசுகளை வாரி குவித்து வந்துள்ளது. இதனால் அந்த பகுதியின் செல்லப்பிள்ளையாகவே பரட்டை காளை பார்க்கப்பட்டது. இந்த காளை கடந்த 4 ஆண்டுகளாக வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் பரட்டை காளை நேற்று உயிரிழந்தது. இதனால் காளைக்கு விசு மற்றும் அந்த பகுதியினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். காளை இறந்த செய்தி அறிந்ததும் அந்த பகுதி மக்கள் மற்றும் ஏராளமான மாடுபிடி வீரர்கள் திரண்டுவந்து காளைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் குழி தோண்டி காளையை அடக்கம் செய்தனர். 20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலக்கிய காளை, பிரியா விடை பெற்றது.

The post ஜல்லிக்கட்டில் 20 ஆண்டாக கலக்கிய திருச்சி பரட்டை காளை உயிரிழந்தது appeared first on Dinakaran.

Tags : Jallikkat ,Nayakkar street ,
× RELATED “ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற...