×

புதிதாக தார்சாலை அமைப்பதற்காக 10 நாட்களுக்கு முன்னர் உடைக்கப்பட்ட சாலை கிடப்பில் போடப்பட்ட அவலம்

*பொதுமக்கள் கடும் அவதி

நெல்லை : நெல்லை அருகே புதிதாக தார் சாலை அமைப்பதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உடைக்கப்பட்ட இரு கிராமங்கள் இடையேயான சாலை கிடப்பில் போடப்பட்டது. இதனால் கடுமையாக அவதிப்படும் மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். நெல்லை அருகே வல்லவன் கோட்டையில் இருந்து துலுக்கர்பட்டி வரையிலான சாலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த சாலை நெல்லை ெவள்ளாளங்குளம் அருகே தென்காசி சாலையையும், மறு முனையில் சங்கரன்கோவில் சாலையையும் இணைக்கும் பல கிராமங்கள் நிறைந்த முக்கியச் சாலையாகத் திகழ்கிறது. இத்தகைய சிறப்புமிக்க இச்சாலையை ஏராளமான கிராம மக்கள் அன்றாடம் பயன்படுத்த தவறுவதில்லை. இங்கு குறைந்த அளவில் பஸ் போக்குவரத்தும் நடந்துவருகிறது.

இதனிடையே கடந்த 10 தினங்களுக்கு முன்னர் துலுக்கர்பட்டி மற்றும் வல்லவன்கோட்டை ஆகிய இருகிராமங்களுக்கு இடையேயான சாலையானது புதிதாக தார் சாலை அமைக்கும்பொருட்டு முழுமையாக உடைக்கப்பட்டது. ஆனால், இந்தப்பணி கிடப்பில்போடப்பட்டது. அதாவது 10 நாட்களை கடந்தபிறகும் புதிதாக தார் சாலை அமைப்பதற்கான பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இதனால் சேதமடைந்த நிலையிலேயே இருந்து வரும் இச்சாலை வழியாக பயணிக்கும் இருசக்கர வாகனஓட்டிகள் உள்ளிட்ட கிராம மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கரடு முரடாக காணப்படும் இச்சாலையை காரணம் காட்டி, பஸ்களும் வர தயங்குகின்றன. இதனிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் சேதமடைந்த இச்சாலை வழியாக குறித்த நேரத்திற்குள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர்.

எனவே, இதுவிஷயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்துவதோடு சேதமடைந்த சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை துவங்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் தற்காலிகமாவது புதுப்பிக்கும் பணியை போர்க்கால அடிப்படையில் உடனே தொடங்கவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். இதனிடையே வல்லவன்கோட்டை பகுதியில் செல்லும் பைப்லைனில் ஏற்பட்ட உடைப்பு உடனடியாக சரிசெய்யப்படவில்லை. இதனால் அதில் இருந்து வீணாக வெளியேறும் குடிநீரானது வீதிகளில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, இதையும் உடனடியாக சீரமைத்து சரிசெய்துதர வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதிதாக தார்சாலை அமைப்பதற்காக 10 நாட்களுக்கு முன்னர் உடைக்கப்பட்ட சாலை கிடப்பில் போடப்பட்ட அவலம் appeared first on Dinakaran.

Tags : Dharsala ,Nellai ,
× RELATED நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில்...