×

அதிமுகவினர் பயத்தின் வெளிப்பாடாக அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: பாஜ மாநில செயலாளர் பேட்டி

தாம்பரம்: செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ சார்பில், வரும் 20ம்தேதி மாலை தாம்பரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் சோலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக, பாஜவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இது தமிழகத்தில் பாஜ மிகப்பெரிய அரசு சக்தியாக உருவெடுத்து இருப்பதை உறுதி செய்கிறது. அண்ணாமலையை மக்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அந்த பயத்தின் வெளிப்பாடாக அதிமுக தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அதிமுகவினர் கட்சியை வளர்ப்பதோ ஆட்சி அமைப்பது பற்றி பேசாமல் மற்ற கட்சி தலைவர்களை பற்றி விமர்சிப்பது ஒரு அநாகரிகமான செயலாக நாம் பார்க்க வேண்டும். வரப்போகும் காலம் நிச்சயமாக இதற்கு பதில் சொல்லும் காலமாக இருக்கப் போகிறது. ஊழல் என்று சொன்னாலே நாங்கள்தான் என மார்தட்டிக் கொள்ளும் அளவிற்கு சிலர் நடந்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுகவினர் பயத்தின் வெளிப்பாடாக அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்: பாஜ மாநில செயலாளர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,State Secretary ,Tambaram ,Chengalpattu North District ,Union Defense Department ,Annamalai ,Dinakaran ,
× RELATED பணம் கொடுக்கும் கட்சிகள் மீது...