×

2 பேரை கத்தியால் சரமாரி வெட்டியவருக்கு மக்கள் தர்ம அடி 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி வேட்டவலம் அருகே பரபரப்பு

வேட்டவலம், ஜூன் 14: வேட்டவலம் அருகே ஸ்டூடியோ உரிமையாளர் உட்பட 2 பேரை கத்தியால் வெட்டிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் படுகாயமடைந்து 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அடுத்த வேளானந்தல் ஊராட்சிக்குட்பட்ட வே.அரசங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(29), தளவாய்குளம் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் செல்லங்குப்பம் அடுத்த செய்யாலேரி காட்டுப்பகுதியில் உள்ள மதுரை வீரன் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த நேற்று முன்தினம் சென்றார். அங்கு வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த மாதவன்(25) என்பவர், மது போதையில் அதே கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைக்கண்ட சரவணனின் தந்தை அரிகிருஷ்ணன், ‘கோயில் அருகில் ஏன் தகராறு செய்கிறீர்கள்’ எனக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாதவன், அரிகிருஷ்ணனை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் சரவணன் மற்றும் உறவினர் அஜீத்குமார் ஆகியோர் மாதவனை தட்டிக்கேட்டனர். அப்போது, மேலும் ஆத்திரமடைந்த மாதவன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணன், அஜித்குமாரின் முதுகு கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினாராம். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் மாதவனை பிடித்து சரமாரியாக தாக்கி வேட்டவலம் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த சரவணன், அஜித்குமார் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த மாதவனும் அதே மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சை முடிந்து மாதவன் வந்தவுடன் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து சரவணன் நேற்று முன்தினம் வேட்டவலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.ஐ சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post 2 பேரை கத்தியால் சரமாரி வெட்டியவருக்கு மக்கள் தர்ம அடி 3 பேரும் மருத்துவமனையில் அனுமதி வேட்டவலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...