×

முருகன் – வள்ளி திருமணத்தை விளக்கி திருச்செந்தூர் கடற்கரையில் கும்மிப்பாட்டு பாடி வழிபாடு

திருச்செந்தூர், ஜூன் 14: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் முருகன் – வள்ளி திருமண முறையை பிரதிபலிக்கும் விதமாக கும்மிப்பாட்டு பாடி பக்தர்கள் வழிபாடு நடத்தினர். திருப்பூர் மாவட்டம், வள்ளி இறைச்சல் பகுதியைச் சேர்ந்த தமிழச்சி வள்ளி கும்மி குழுவின் 50வது பொன்விழா நிகழ்ச்சி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நடந்தது. இதையொட்டி வள்ளி கும்மி குழு சார்பில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கும்மிப்பாடல்களை பாடி நடனம் ஆடினர். இதில் குழந்தைகள் முதல் பெண்கள் மற்றும் ஆண்களும் ஒரே மாதிரியான வண்ண உடைகளை அணிந்து கொண்டு முருகன் – வள்ளி திருமண முறையை பிரதிபலிக்கும் விதமாக பாடல்களை பாடி கும்மி ஆட்டம் ஆடினர். இதனை சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் ஏராளமானோர் கண்டுகளித்து ஆரவாரம் செய்தனர். அழிந்து வரும் பாரம்பரியமிக்க வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதாக கூறிய கலைக்குழுவினர், தமிழர்களின் வாழ்வியலுடன் ஒன்றிய முருகன் – வள்ளி திருமணத்தை பாடல்கள் பாடி நடனம் மூலம் பிரதிபலிக்கும்போது புத்துணர்ச்சி ஏற்படுவதாகவும், இதன் மூலம் வேண்டுதல்களும் நிறைவேறுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

The post முருகன் – வள்ளி திருமணத்தை விளக்கி திருச்செந்தூர் கடற்கரையில் கும்மிப்பாட்டு பாடி வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Murugan ,Kummippatu ,Padi ,Tiruchendur ,Tiruchendur Subramania Swamy Temple ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்