×

காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் ஸ்மார்ட் காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் திட்டமாக மின்னணு ரோந்து (E-Beat) முறையை செயல்படுத்தும் ‘ஸ்மார்ட் காவலர்’ தொடக்கி வைத்து, 408 கையடக்க கணினிகளை (Tablet) அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார். தமிழக காவல் துறையில் அனைத்து காவல் நிலையங்களிலும், காவல் நிலைய பணிகள், கோப்புகள், ரோந்து பணிகள் மற்றும் காவல் பணிகள் வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப நவீனபடுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக காவல்துறையில், ரோந்து பணிகளை நவீனபடுத்த, ‘ஸ்மார்ட் காவலர்’ செல்போன் செயலி (Smart Kavalar App) மூலம் மின்னணு ரோந்து பணி (E-beat) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணிகள் மற்றும் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் நிர்வகிப்பதற்கும், ரோந்து மற்றும் களக் காவல் பணிகளை மிகவும் திறம்படச் செய்வதற்கும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான நோக்கத்துடன் தமிழ்நாடு காவல்துறையின் பயன்பாட்டிற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மின்னணு ரோந்து பணிகளை அமல்படுத்துவதற்கு ரோந்து செல்லும் காவல் அலுவலர்களுக்கு 408 கையடக்க கணினிகள் (Tablets) சென்னை பெருநகர காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது.

2023-2024 நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், தமிழ்நாடு முதலமைச்சர் காவல் நிலைய விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு விசாரணையின்போது வழக்கின் விவரங்களை பதிவு செய்யவும், ஆடியோ, வீடியோ பதிவு செய்யவும், குற்றவாளிகளின் புகைப்படங்கள், அறிக்கைகள், வழக்கு தொடர்பான கோப்புகள் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யவும், விசாரணை அதிகாரிகளுக்கு பேப்லட் (Phablets) கருவிகள் வழங்க உத்தரவிட்டதன்பேரில், சென்னை பெருநகர காவல் விசாரணை அதிகாரிகளுக்கு ரூ.1,12,50,000 செலவில் 450 பேப்லட் (Phablets) சாதனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழக காவல்துறையின் நவீன திட்டங்களை அமல்படுத்தும் விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப, இன்று (13.06.2023) காவல் ஆணையரகத்தில், சென்னை பெருநகரிலுள்ள 102 காவல் நிலையங்களுக்கும் 408 கையடக்க கணினிகள் (Tablets) வழங்கி சிறப்புரையாற்றினார்.

டேப்லட் கருவியில் உள்ள ஸ்மார்ட் காவலர் செயலி (Smart Kaavalar App) மூலம், ரோந்து பணிகளின்போது, காவல் அலுவலரின் தற்போதைய இருப்பிடம் (Location) உட்பட ரோந்து பணிகளை கண்காணிக்கவும், (Face Recognition system) எனப்படும் முக அடையாளத்தை வைத்து குற்ற நபர்களை கண்காணிக்கும் செயலியை கொண்டு சந்தேக நபர்களை சோதனை செய்து, குற்றவாளிகளை பிடிப்பது போன்ற டேப்லட் கருவியில் பல அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் மின்னணு ரோந்து (E-beat) முறை மற்றும் மற்ற காவல் பணிகளை செம்மையாக செயல்படுத்தி, குற்றங்களை குறைக்க இக்கருவி வழங்கப்பட்டுள்ளது எனவும், காவல்துறையின் CCTNS, FRS APP, Vaahan APP, E-Challan உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் இணைத்து செயல்பட வழிவகுப்பதுடன் அவற்றை கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக காவல் ஆணையாளர் தெரிவித்தார். இக்கருவி மூலம் காவல் நிலையத்தின், காவல் ஆய்வாளர்கள், களப்பணியாற்றும் காவல் அலுவலர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, காவல் நிலைய பணிகளை மிகச்சிறப்பாக செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், காவல் நிலையத்தின் நீதிமன்ற பணி, அழைப்பாணை (Summon), பிடியாணை (Warrant), மருத்துவமனை பணி, புகார் மனு, காவல் விசாரணை சரிபார்ப்புப் பணிகள் தொடர்பான பணிகளை பதிவு செய்து, தினசரி ஆணையிடவும், வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர ரோந்து பணியில் சந்தேக நபர்களை விசாரணை செய்தல், சந்தேக வாகனங்களை பரிசோதனை செய்தல், மூத்த குடிமக்கள் வீடுகளை சரிபார்த்தல் போன்ற பணிகளையும் கண்காணிக்க வசதி உள்ளது. இக்கருவியில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வாசகங்களை படிக்கவும், டைப் செய்யும் வசதி உள்ளது. இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, இ.கா.ப., (தெற்கு), J.லோகநாதன், இ.கா.ப., (தலைமையிடம்), இணை ஆணையாளர் B.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் A.பவன்குமார் ரெட்டி, இ.கா.ப,. (வண்ணாரப்பேட்டை) S.ராதாகிருஷ்ணன் (தலைமையிடம்), V.R.சினிவாசன் (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

The post காவல் ரோந்து பணியை நவீன படுத்தும் ஸ்மார்ட் காவலர் திட்டத்தை தொடங்கி வைத்தார் காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்! appeared first on Dinakaran.

Tags : Shankar Jiwal ,Chennai ,Metropolitan Police Commissioner ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...