×

செம்பனார்கோயில் பகுதியில் அறுவடைக்கு தயார் பருத்திக்கு நல்ல விலை கிடைக்குமா?

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

செம்பனார்கோயில் : செம்பனார்கோயிர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள பருத்திக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், கிள்ளியூர், மாத்தூர், முக்கரும்பூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை, திருக்கடையூர், சங்கரன்பந்தல், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், பருத்தி சாகுபடி செய்திருந்தனர். இந்த பகுதிகளில் சாகுபடி செய்து இரண்டு மாதத்திற்கு மேலான பருத்திச் செடிகளில் தற்போது காய்கள் வெடித்து பஞ்சு வெளிவருகிறது.

இதனை விவசாயிகள் பறித்து, விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றனர். சில பகுதிகளில் பருத்திச் செடியில் காய்கள் மட்டும் முளைத்துள்ளது. இந்நிலையில் பருத்தி சாகுபடி விவசாயிகள் கூறுகையில், கோடை காலத்திற்கு ஏற்ற பயிராக பருத்தி உள்ளது. இதனால் சம்பா அறுவடை பணியை முடித்த பின்னர் தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் பருத்தி சாகுபடி செய்தோம்.

இதனை தொடர்ந்து சில வாரங்கள் கடந்த பின்னர் பருத்தி செடியின் அடிப்பகுதியில் பொட்டாஸ், அடிஉரம், யூரியா போன்றவை செலுத்தி, காய்ப்பு காய்க்கும்போது செடி தாங்கும் வகையில் மண்ணை சுற்றி தேக்கினோம் (பார் அணைக்கும் பணி). அதன் பின்னர் பூச்சிகள் தாக்குதலில் இருந்து பருத்திச் செடியை பாதுகாக்க மேல் மருந்து தெளித்தோம்.

அதன் பயனாக தற்போது பருத்திச் செடிகள் செழிப்பாக வளர்ந்து, செடிகளில் முளைத்த காய்கள் வெடித்து பஞ்சு வெளியாகி வருகிறது. அதனை பறித்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து வருகின்றோம். தற்போது ஒரு குவிண்டாலுக்கு ரூ.7 ஆயிரம் வரை விலை போகிறது.

சில ரகங்கள் மட்டும் ரூ.7 ஆயிரத்திற்கு மேலும் விலை போகிறது. ஆனால் இந்த விலை எங்களுக்கு போதுமானதாக இருக்காது ஏனென்றால் பருத்தி சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவாகிறது. அதனை பார்க்கும் போது தற்போது இந்த விலை எங்களுக்கு கட்டுப்படி ஆகாது. எனவே நாங்கள் லாபம் பெறும் வகையில் நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post செம்பனார்கோயில் பகுதியில் அறுவடைக்கு தயார் பருத்திக்கு நல்ல விலை கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Sembanarkoil ,Sembanargoil ,Sembanargoir ,Dinakaran ,
× RELATED செம்பனார்கோயில் அருகே ஆறுபாதியில்...