×

பாக்குடியில் மும்முனை மின்சார நேரத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும்

விராலிமலை, ஜூன் 13: இலுப்பூர் தாலுகா பாக்குடி பகுதியில் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கும் நேரத்தை முறைப்படுத்தி அறிவிப்பு செய்து விநியோகம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விராலிமலையில் திங்கட்கிழமை நடைபெற்ற ஒன்றிய கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விராலிமலை ஒன்றிய குழு கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் – ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி பெரும் விபத்து நேரிட்டது இதில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம் நடந்துள்ள வேலைகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்து பேசினார்.மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.தர்மராஜன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார் கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அய்யாதுரை, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி மணி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் குமரேசன், ராஜாங்கம், மருதமுத்து, பன்னீர், சுப்பிரமணி, செபஸ்தியார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இலுப்பூர் தாலுகா பாக்குடி பகுதியில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் எப்போது வருகிறது எப்போது நிறுத்தப்படுகிறது என்று தெரியாமல் விவசாயிகள் வயல்வெளியில் 24 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய அவல நிலை இருக்கிறது எனவே மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை முறைப்படுத்தி அறிவிப்பு செய்து விநியோகம் செய்ய வேண்டும். அதேபோல் பாக்குடி ஊராட்சி நெருங்குளாக்குடியில் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை அகற்றி புதிய மின் கம்பங்கள் நட வேண்டும். பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதால் இந்தப் பகுதியில் மின் தடை ஏற்பட்டால் சரி செய்வதற்கு மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது எனவே கூடுதல் மின் பணியாளர்களை பணியமர்த்தி உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கிராமப்புற மக்களின் வாழ்நிலை வறுமை நிலையில் மிகுந்த நெருக்கடியில் இருப்பதால் மின் கட்டண உயர்வு என்பது மக்களை மிகவும் பாதித்திருக்கிறது எனவே கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இலுப்பூர் தாலுகா பாக்குடி கிராமத்தில் இரண்டு ஏக்கர் நிலம் அளந்து பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது உடனடியாக அதிகாரிகள் உறுதியளித்தபடி விரைந்து அளவை பணிகளை முடித்து பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

The post பாக்குடியில் மும்முனை மின்சார நேரத்தை முறைப்படுத்தி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Pakkuti ,Viralimalai ,Ilupur taluk Pakkudi ,
× RELATED விராலிமலை சாலை விபத்தில் வாலிபர் பலி