×

வரதராஜர் கோயில் தேர் உற்சவத்தை 1.5 செமீ அளவில் நுட்பமாக வரைந்து அசத்திய ஓவியர்: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜர் கோயில் தேர் உற்சவத்தை 1.5 செமீ அளவில் ஓவியர் ஒருவர் நுட்பமாக வரைந்து அசத்தியுள்ளார். அவரது இந்த முயற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரமோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைகாசி பிரமோற்சவத்தையொட்டி, வரதராஜ பெருமாள் காலை, மாலை என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஓவியரான சங்கர் என்பவர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்ச நிகழ்வின்போது, வரதராஜ பெருமாள் கருட வாகனம், சிம்ம வாகனம், ஹம்ஸ வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்ததை புகைப்படங்களாக தினந்தோறும் காலை, மாலை என இருவேளையும் சேகரித்து, அடுத்த 2-3 மணி நேரத்தில் நீர் வண்ண ஓவியங்களாக மிக அழகாகவும், நுணுக்கமாகவும் வரைந்து அசத்தியுள்ளார்.

இதில், குறிப்பாக வைகாசி பிரமோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற முக்கிய திருவிழாவான தேர் உற்சவத்தை மிகச் சிறிய அளவிற்கு, குறிப்பாக 1.5 செமீ அளவில் நீர் வண்ண ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து ஓவியர் சங்கர் கூறுகையில், ‘புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரமோற்சவத்தை ஆவணப்படமாக மேற்கொள்வதற்காக இந்த ஓவியங்களை வரைந்தேன். இதை காட்சிப்படுத்த திட்டமிட்டு வருகிறேன். என்னிடம் பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு வரைந்த அனுபவத்தையும், அதன் நுணுக்கங்களையும் பயிற்றுவிக்க இருக்கிறேன்’ என்றார்.

The post வரதராஜர் கோயில் தேர் உற்சவத்தை 1.5 செமீ அளவில் நுட்பமாக வரைந்து அசத்திய ஓவியர்: பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Varadarajar Temple ,Awathya Painter ,Kanchipuram ,Varadarajar Temple Cheru ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு