×

ஓராயிரம் அமித்ஷா வந்தாலும் முதல்வரின் செல்வாக்கை அசைக்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: ‘ஓராயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழ்நாடு முதல்வரின் செல்வாக்கை அசைக்க முடியாது’ என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவிக நகர் மண்டலம் ஸ்டீபன்சன் சாலை மேம்பாலப் பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேம்பால பணிகளை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் அனைத்தும், திட்டமிடல் இல்லாமல் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள், பேருந்து நிலையத்தைச் சுற்றி சாலை வசதிகள், மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாய் வசதிகள், பொழுதுபோக்கிற்காக பூங்கா வசதிகள், மருத்துவ மையம், காவல் மையம், 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.30 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையத்துக்கு இடம் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. எனவே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து, பேருந்து நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

தமிழகத்தில் முதலில் பாஜ 25 தொகுதிகளில் போட்டியிடட்டும். அப்படி போட்டியிட்டாலும் தேர்தலுக்கான டெபாசிட் தொகையை தக்க வைக்கவே பாஜவினர் போராடுவர். ஒரு அமித்ஷா இல்லை, ஓராயிரம் அமித்ஷா வந்தாலும் தமிழக முதல்வரின் செல்வாக்கையும், முதல்வர் மீது தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும், தமிழக மக்களையும் அசைத்துப் பார்க்க முடியாது. மேலும், 2 தமிழர்கள் பிரதமராவதை திமுக தடுத்ததாக அமித்ஷா கூறுகிறாரே என்ற கேள்விக்கு, தமிழக முதல்வரும் தமிழர்தான். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

The post ஓராயிரம் அமித்ஷா வந்தாலும் முதல்வரின் செல்வாக்கை அசைக்க முடியாது: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Amitsha ,Minister ,SekarBabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister of ,Tamil ,Nadu ,SeagarBabu ,
× RELATED ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற...