×

திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா கல்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதியதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலப் பணிகளை அமைச்சர் கர் பாபு இன்று (12.06.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த மேம்பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் மீதமுள்ள பணிகளை ஒருவாரத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இப்பணியின் மூலம், பெரம்பூர், ஓட்டேரி, புளியந்தோப்பு, பிரசைவாக்கம் மற்றும் வேப்பேரி பகுதிகளில் உள்ள சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இந்த ஆய்வின்போது, மேயர் ஆர்.பிரியா, வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ.இராதாகிருஷ்ணன், இணை ஆணையர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், மத்திய வட்டார துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமைப் பொறியாளர் எஸ்.இராஜேந்திரன், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மண்டல அலுவலர் ஏ.எ.ஸ்.முருகன் ஆகியோர் உள்பட பலர் உடனிருந்தனர். இந்நிகழ்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், மழைக்காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் இந்தப் பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு, இந்தப் பேருந்து நிலையத்தில் பல்வேறுகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, 6 மாத காலங்களில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பொறுப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எனக்கு அளித்த பிறகு 8 முறை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரடியாக களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 10க்கும் மேற்பட்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதன் பயனாக, அங்கு மேலும் தேவைப்படும் அடிப்படை வசதிகள், பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக, தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கின்ற வகையில் ஒரு சாலை 1.20 கி.மீ நீளத்திற்கு நடைபெற்று வருகிறது. அதேபோன்று போலீஸ் அகாடமி சாலையில் சுமார் 6 கி.மீ. நீளத்திற்கு புதிதாக சாலை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 2 கி.மீ. வனத்துறையின் வசம் உள்ளதால், வனத்துறையிடம் முன்அனுமதி பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதி 5, வண்டலூர் சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற பொழுது, மாற்றுப்பாதையாக 6 கி.மீ. அளவிற்கு சாலை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவைகள் இல்லாமல் சமீபத்தில் பெய்த சிறு மழைக்கு கூட பெருமளவு தண்ணீர் தேங்கி நின்ற காரணத்தினால் சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க பணிகள் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஒரு பூங்கா அமைக்க முதலமைச்சர் அவர்களால் அடிக்கல் நாட்டி பணிகள் ஏற்கனவே தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஒரு புதிய பூங்கா சுமார் 6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளது.

போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது, அதனை முறையாக சரிசெய்வதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்குண்டான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட உள்ளது. நாள்தோறும் 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பிற்கு பிறகு எந்தவகையிலும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஆம்னி பேருந்து நிலையத்திற்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 5 ஏக்கர நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் சுமார் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருதல், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற அனைத்தையும் நிறைவேற்றி விரைவில் இந்தப் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். மேயர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்ட மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 11 மேம்பாலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பாலப் பணிகளில் திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர் நெடுஞ்சாலையில் புளியந்தோப்பு பகுதியை இணைக்கும் வகையில் ஸ்டீபன்சன் சாலையில் மூலதன நிதியின் கீழ் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் ஓட்டேரி நல்லா கால்வாயின் குறுக்கே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு, புதிய உயர்மட்டப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்டீபன்சன் சாலை மேம்பாலப் பணிகள் 18 மாதங்களாக நடைபெற்று வருகிறது. சாலை மைத்தடுப்புகள், சாலைகள் அமைத்தல் போன்ற சிறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்தப் பணிகள் அனைத்தும் 7 நாட்களுக்குள் முடிக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியின் கீழ் சாலை மையத்தடுப்புகள், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகளுடன் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் இந்த மொத்த பாலமும் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பாலமானது பொதுமக்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது என மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார்.

The post திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : CV G.K. ,minister ,segarbabu ,stephenson road ,Chennai ,Metropolitan Chennai Corporation ,Otteri Nalla Canal ,Zegarbabu ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...