×

புதுவையில் 3 கார்களை சேதப்படுத்தி மாணவரை கத்திமுனையில் மிரட்டி நகை பறித்த 3 பேர் அதிரடி கைது

புதுச்சேரி: புதுச்சேரி, கதிர்காமம், ஆனந்தா நகர், கோவிந்தன் வீதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்றபோது 2 பைக்கில் வந்த 3 பேர் கும்பல் திடீரென அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தது. பின்னர் அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 கார்களின் கண்ணாடிகளை அடுத்தடுத்து கத்தி, தடியால் அடித்து நொறுக்கிய கும்பல் ரகளையில் ஈடுபட்டு அங்கிருந்து தலைமறைவானது. தகவலறிந்த கோரிமேடு எஸ்ஐ ரமேஷ் தலைமையிலான போலீசார், ஆகாஷிடம் நடந்த சம்பவம் பற்றி விசாரித்தனர்.

பின்னர் அவரிடம் புகாரை பெற்ற காவல்துறை அடையாளம் தெரியாத வழிப்பறி கும்பல் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா மற்றும் வண்டி நம்பர் மூலம் வழிப்பறி ஆசாமிகளை அடையாளம் கண்ட தனிப்படை மேட்டுப்பாளையம், சண்முகாபுரத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான பிரபாகரன், நவீன் மற்றும் ஐடிஐ முடித்த முகிலன் உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் துப்பு துலங்கியது. அதாவது பிடிபட்ட பிரபாகரனுக்கும், அவரது கூட்டாளியான கதிர்காமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இதன் எதிரொலியாக தனது கூட்டாளிகளுடன் விஜய்யை தேடி பிரபாகரன் கதிர்காமம் வந்ததும், அப்போது அவர் அங்கு இல்லாத நிலையில் ஆகாஷ் பெயர் கொண்ட நபர் விஜய்யின் நண்பர் என்பது தெரியவரவே ஆள்மாறாட்டத்தில் கல்லூரி மாணவரான ஆகாஷை தாக்கி நகையை பறித்துவிட்டு தலைமறைவானது தெரியவந்தது. வழிப்பறி செய்த நகை பறிமுதல் செய்தபின் கைது நடவடிக்கை இருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

The post புதுவையில் 3 கார்களை சேதப்படுத்தி மாணவரை கத்திமுனையில் மிரட்டி நகை பறித்த 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Akash ,Ananda Nagar ,Govindan Road ,Kathirgamam, Puducherry ,Dinakaran ,
× RELATED புதுவையில் 5 பேரிடம் ₹7.68 லட்சம் மோசடி