×

அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு மறுசுழற்சி செய்யும் குழாய்கள்-அமைச்சர் மனோதங்கராஜ் தகவல்

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீரினை மறுசுழற்சி செய்யும் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீரினை மறுசுழற்சி செய்யும் குழாய்கள் திறப்புவிழா நடந்தது. கலெக்டர் தர் தலைமை வகித்தார். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்து கூறியதாவது:

குமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையிலும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்கும் விதமாகவும், நீர் நிலைகளை தூர் வாரி மேம்படுத்தும் நோக்கிலும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏ.வி.எம் கால்வாய் தூர் வாருவதற்கான முன் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரினை அதிகப்படுத்தும் வகையில் அனைத்து வீடுகளிலும், மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திட துறை சார்ந்த அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்களிப்புடன் ரூ.10 லட்சம் மதிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மூலச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக மழைநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீரினை மறுசுழற்சி செய்யும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அனைத்து பகுதிகளிலும் விரிவு படுத்திட துறை அலுவலர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நிலத்தடி நீரினை சேகரித்து நீர் நிலைகளை உயர்த்திட முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கவுசிக், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, கொல்லங்கோடு நகர்மன்ற தலைவர் ராணி ஸ்டீபன், கிள்ளியூர் தாசில்தார் அனிதா குமாரி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு மறுசுழற்சி செய்யும் குழாய்கள்-அமைச்சர் மனோதங்கராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Manodhankaraj ,Nagercoil ,Kanyakumari district administration ,ICICI Bank ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...