×

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழு விழிப்புணர்வு: மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழுவினரின் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் பயணத்தை மேயர் பிரியா நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகளவில் 19 முதல் 23 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் ஏரிகள், ஆறுகள் மற்றும் கடலில் கலந்து மாசு உண்டாகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பூமிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இதை தடுப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்வு சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும், நடவடிக்கையையும் ஊக்குவிக்கிறது.

உலக சுற்றுச்சூழல் தினத்தின் 50வது ஆண்டு நிறைவின் கருப்பொருள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம்” என்பதாகும். இந்த கருப்பொருள் மூலம் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மாசு குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கலைக்குழுவினரின் பிரசார பயணத்தை மேயர் பிரியா நேற்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடிப்போம் என்ற உறுதிமொழியை மேயர் பிரியா தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர். மேலும் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியயை அவர் பார்வையிட்டார்.

பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் மாசு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சியின் சார்பில் மூன்று நாட்களுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. பெருநகர சென்னை மாநகராட்சி, மழைநீர் வடிகால் துறையின் சார்பில் விழிப்புணர்வு குழு மற்றும் திட்ட உதவி ஆலோசகர்கள் கொண்ட குழுவினர் வாயிலாக கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது. ஜூன் 5 (நேற்று) அம்பத்தூர் மண்டலம், மாதனாங்குப்பம் சாலைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் திடக்கழிவுகள் கொட்டுவதை தவிர்ப்பது குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இன்று (ஜூன் 6) திருவொற்றியூர் மண்டலத்திற்குட்பட்ட சத்தியவாணி முத்து நகர் மற்றும் சன்னதி தெரு, மணலி மண்டலத்திற்குட்பட்ட அய்யா கோயில் சாலை மற்றும் சி.பி.சி.எல். நகர் ஆகிய பகுதிகளில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்யின் மூலம் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கின்றன.

நாளை (ஜூன் 7) மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட எதைமா நகர் மற்றும் சாரதி நகர், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பாரத் ராஜீவ் காந்தி நகர், அண்ணாநகர் மண்டலத்திற்குட்பட்ட சிட்கோ நகர் 3வது பிரதான சாலை ஆகிய பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்தல் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்தும் கலைநிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், தலைமைப் பொறியாளர் (பொது) ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் மாசு குறித்து கலைக்குழு விழிப்புணர்வு: மேயர் பிரியா தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : World Environment Day ,Mayor ,Priya ,CHENNAI ,Chennai Corporation ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்