×

ஊராட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல் கிராம மக்கள் சாலை மறியல்: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஊராட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து, சூளைமேனி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி கிராமத்தில் நேற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம், நடந்து கொண்டிருக்கும் பணியை ஆய்வு செய்வதற்காக சூளைமேனி ஊராட்சி தலைவர் சாந்தி(45). அவரது கணவர் காளிதாஸ் ஆகியோர் சென்றனர். அப்போது சூளைமேனி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதம்(41) என்பவர் அதே பகுதியில் 1.5 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்வதற்காக உழுது கொண்டிருந்தார். அந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது.

அதனால், நிலத்தை உழுது கொண்டிருந்த சங்கீதத்திடம், அரசு நிலைத்தை ஏன் ஆக்கிரமித்து நீங்கள் வேலை செய்துக்கொண்டிருக்கிறீர்கள் என ஊராட்சி தலைவர் சாந்தி கேட்டுள்ளார். இதை எதிர்த்து சங்கீதம் பேசியுள்ளார். இதனால் சங்கீதத்திற்கும், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் களிதாசுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சங்கீதம், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காளிதாசை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த காளிதாஸ் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஊராட்சி தலைவரின் கணவர் தாக்கப்பட்டதையறிந்த கிராம மக்கள் நேற்று சென்னை – திருப்பதி இடையே சூளைமேனி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சத்தியபாமா, எஸ்ஐ முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், காளிதாசை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post ஊராட்சி தலைவரின் கணவர் மீது தாக்குதல் கிராம மக்கள் சாலை மறியல்: ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Attack on ,Panchayat ,Uthukottai ,Oothukottai ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...