×

திருமோகூர் சம்பவத்தை கண்டித்து மதுரையில் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் எம்.பி பேட்டி

 

மதுரை, ஜூன் 5: மதுரை திருமோகூரில் நடந்த தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, வரும் 12ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் எம்.பி., தெரிவித்துள்ளார். மதுரை திருமோகூரில் மே 3ம் தேதி நடந்த கோயில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. 4 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மோதல் சம்பவம் குறித்து 24க்கும் மேற்பட்டோர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த 4 பேரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘திருமோகூரில் நடந்த கோயில் திருவிழாவின் போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நள்ளிரவில் தலித் குடியிருப்பு பகுதிக்குள் 50க்கும் மேற்பட்டோர் சென்று வீடுகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் காயமடைந்தனர், டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமாகியுள்ளன. தலித் மக்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்.

சாதிய வன்கொடுமையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருமோகூர் சம்பவத்தை கண்டித்து மதுரையில் வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்றார்.
இதைத்தொடர்ந்து, மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து புறப்பட முயன்ற அவரது கார் முன்பு இளைஞர் ஒருவர் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். தாக்குதல் சம்பவம் நடந்த திருமோகூருக்கு திருமாவளவன் வர வேண்டும் என்று அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த நபரை, திருமாவளவன் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

The post திருமோகூர் சம்பவத்தை கண்டித்து மதுரையில் 12ம் தேதி ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் எம்.பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tirumogur ,Thirumavalavan ,Dalits ,Tirumogur, Madurai ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது