×

போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய சிறுவன் கைது: கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன்

திருவொற்றியூர்:கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை போலீசார் அழைத்துவந்தபோது தப்பியோடிவிட்டான். பின்னர் அவனை போலீசார் பிடித்தனர்.சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் விஜி (எ) பொய் விஜி (24). இவர் முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் கொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (22), கட்டு சத்தியா (24), மணி (21), முட்டை கண்ணன் (23) உள்பட 11 பேரை கைது செய்தனர். இதன்பின்னர் அவர்களை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுவனை திருவள்ளூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

இந்த நிலையில், அந்த சிறுவனை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் காப்பகத்துக்கு மாற்ற எண்ணூர் போலீசார் முடிவு செய்து போலீசார் 2 பேர், திருவள்ளூர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்றனர். அங்கு முறையான ஆவணங்களை சமர்ப்பித்து சிறுவனை அழைத்துக்கொண்டு மின்சார ரயிலில் சென்னைக்கு வந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கியபோது திடீரென்று அந்த சிறுவன் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிவிட்டான். இதையடுத்து போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், பொன்னேரியில் உள்ள பாட்டி வீட்டில் பதுங்கியிருந்த சிறுவனை போலீசார் மீட்டு கெல்லீசில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

The post போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோடிய சிறுவன் கைது: கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவன் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Tsunami ,Ennore, Chennai ,
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்