×

தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெகுநேரம் நடனமாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி: அம்பத்தூரில் பரபரப்பு

அண்ணாநகர்: சென்னை சிட்லப்பாக்கம் சபரி தெருவை சேர்ந்தவர் மணி பிரசாந்த் (21). தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் பணியாற்றிய இளம்பெண் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மணிபிரசாந்த், நண்பர்களுடன் வெகுநேரமாக நடனமாடியுள்ளார். திடீரென மணி பிரசாந்திற்கு வாந்தி மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டு துடித்து துடித்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே மணி பிரசாத் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தகவல் அறிந்ததும் நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மணிபிரசாந்தை சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபிரசாந்த் சாப்பிட்ட உணவு செரிக்காமல் மூச்சு திணறி இறந்தாரா? அல்லது மதுபோதையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உண்மை நிலை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெகுநேரமாக நடனமாடிய வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வெகுநேரம் நடனமாடிய வாலிபர் மயங்கி விழுந்து பலி: அம்பத்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mani Prasanth ,Sabari Street, Chitlapakkam, Chennai ,Tambaram.… ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...