×

திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் வைகாசி தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்

 

திருப்புத்தூர், ஜூன் 2: திருப்புத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருப்புத்தூரில் உள்ள திருத்தளிநாதர் யோக வைரவர் கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த மே 24ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் திருநாளன்று திருத்தளிநாதர் சுவாமிக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 9ம் திருநாளான நேற்று காலை 7.35 மணியளவில் கோயிலிலிருந்து பெரிய தேரில் சிவகாமி அம்மனும், நடு தேரில் பிரியாவிடை உடன் திருத்தளிநாதர் சுவாமியும், சிறிய தேரில் விநாயகப் பெருமானும் எழுந்தருளினர்.

மாலை 4.50 மணியளவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில், ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, வெகு விமர்சையாக தேரோட்டம் நடந்தது. இதில் திருப்புத்தூர், தம்பிபட்டி, தென்மாபட்டி, புதுப்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு சுவாமி தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. 10ம் திருநாளான இன்று காலை 10 மணியளவில் திருத்தளித் தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணியளவில் கார்காத்த வெள்ளாளர் சமூகம் சார்பில் தெப்பத் திருவிழா நடைபெறும்.

The post திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் வைகாசி தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர் appeared first on Dinakaran.

Tags : Vaikasi Chariot ,Thiruthalinath Swamy Temple ,Tiruputhur ,Vaikasi Visakha festival ,Arulmiku ,Sivagami Udanaya ,Thirutalinathar Swamy Temple ,Vaikasi ,
× RELATED மஞ்சு விரட்டில் மாடு முட்டி முதியவர் சாவு