×

வண்டலூர் அருகே பரபரப்பு ராட்சத பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி: 2 பேர் சீரியஸ்

கூடுவாஞ்சேரி, ஜூன் 1: வண்டலூர் அருகே ராட்சத பாய்லர் வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், இரண்டு தொழிலாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு விநாயகபுரம் பகுதியில் ஏராளமான சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் தார் பிளாண்டுகள் இயங்கி வருகிறது. இதில், அப்பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் தனியாருக்கு சொந்தமான சிமென்ட் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இதில் ஆந்திரா, ஒடிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த வடமாநில வாலிபர்கள் 500க்கும் மேற்பட்டோர் இங்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இங்கு சிமென்ட், சிப்ஸ் மூலம் 24 மணி நேரமும் கலவை செய்து சாலிட் கற்கள் மற்றும் மிதக்கும் கற்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், சுமார் 50 மீட்டர் கொண்ட 8 ராட்சத பாய்லர்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு பாய்லரிலும் தலா 800 மிதவை கற்கள் நிரப்பப்பட்டு அதனை வேக வைப்பதற்காக 12 மணி நேரம் ரோலிங் செய்வது வழக்கம். இந்நிலையில், வட மாநில வாலிபர்கள் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இதில், விழுப்புரத்தை சேர்ந்த யுவராஜ் (25) என்ற வாலிபர் ராட்சத பாய்லரை ஆப்பரேட் செய்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக 7ம் நம்பர் ராட்சத பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த சந்தல் என்பவரின் மகன் மீராஜ் (18) என்ற தொழிலாளி 100 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்.

அவருடன் இருந்த விழுப்புரத்தைச் சேர்ந்த ஆப்பரேட்டர் யுவராஜ் (25), உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த ஹெக்லத் (25) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். இதனை கண்டதும் சக தொழிலாளர்கள் செய்வது அறியாது திகைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காயார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் பொறுப்பு எஸ்ஐ ராஜா சிங்காரவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய யுவராஜ் மற்றும் மீராஜ் ஆகிய இருவரையும் மீட்டு, ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நள்ளிரவில் நடந்த இச்சம்பவத்தால் கீரப்பாக்கம் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்ட பொருட்கள்
ராட்சத பாய்லர் வெடித்ததில் அதன் மூடி பகுதி, அதிலிருந்த இயந்திரங்கள், தளவாட சாமான்கள், 800 மிதக்கும் கற்கள் மற்றும் மீராஜ் உள்ளிட்ட 3 வாலிபர்களும் 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. மேலும், கற்களை தூக்கி வைக்கும் இயந்திரம் மற்றும் அங்கிருந்த அறைகள் சின்ன பின்னமாகி உருக்குலைந்தன.

விபத்து தவிர்ப்பு
மிதவை கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நிறுவப்பட்டுள்ள 8 ராட்சத பாய்லர்களில் 7ம் நம்பர் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அருகில் இருந்த 8ம் நம்பர் பாயிலரும் சேதமடைந்தது. இதனை கண்டதும் சக தொழிலாளர்கள் ஓடி வந்து அருகில் இருந்த பாய்லர்கள் வெடிக்காத வகையில் உடனடியாக சுவிட்-ஆப் செய்து நிறுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

The post வண்டலூர் அருகே பரபரப்பு ராட்சத பாய்லர் வெடித்து வடமாநில தொழிலாளி பலி: 2 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Vandalur ,north state ,Guduvanchery ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்