×

மோடி மீது விமர்சனம் ராகுல் விரக்தியில் பேசுகிறார்: பா.ஜ கடும் தாக்கு

புதுடெல்லி: ராகுல் காந்தி விரக்தியில் பேசுகிறார் என்று பா.ஜ விமர்சனம் செய்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல்காந்தி நேற்று பிரதமர் மோடியை விமர்சனம் செய்தார். கடவுளையே அவர் குழப்பி விடுவார் என்று கூறினார். இதுபற்றி பா.ஜ பதிலடி கொடுத்துள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது:
ஒன்றுமே தெரியாத ஒருவர் திடீரென்று எல்லாவற்றிலும் நிபுணராக மாறுவது வேடிக்கையானது. வரலாறு பற்றிய அறிவு எதுவும் இல்லாமல், தனது குடும்பத்திற்கு அப்பால் செல்லாத ஒருவர் இப்போது வரலாற்றைப் பற்றி பேசுகிறார். உருளைக்கிழங்கில் இருந்து தங்கம் உற்பத்தி செய்வதாகக் கூறிக்கொண்ட ஒரு மனிதர் அறிவியலைப் பற்றி விரிவுரை செய்கிறார். குடும்ப விவகாரங்களுக்கு அப்பால் செல்லாத ஒரு மனிதர் இப்போது இந்தியாவின் போரை வழிநடத்த விரும்புகிறார். இல்லை மிஸ்டர் போலி காந்தி! இந்தியாவின் மையமே அதன் கலாச்சாரம்தான். வெளிநாட்டு மண்ணைப் பயன்படுத்தி நாட்டைக் களங்கப்படுத்தும் உங்களைப் போலல்லாமல், இந்தியர்கள் தங்கள் வரலாற்றைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்கள். அவர்களால் தங்கள் புவியியலை நன்கு பாதுகாக்க முடியும். இவ்வாறு கூறினார்.

ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில்,’ ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது இந்தியாவை அவதூறாகப் பேசுவது வழக்கமாகிவிட்டது. பிரதமர் மோடியை அவதூறு செய்யும் முயற்சியில் வெளிநாடுகளில் இந்தியாவை அவமதிக்க அவர் எதையும் விட்டுவிடவில்லை. இது அவரது விரக்தியை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அனில் பலுனி கூறுகையில்,’ நாட்டை அவதூறாகப் பேசுவதும், அதற்கு எதிராக சதி செய்வதும் காங்கிரசின் குணாம்சத்தில் உள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதாக உலகமே பாராட்டி வருகிறது. ஆனால் நாட்டில் உள்ள சில தலைவர்கள் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுஷில் மோடி கூறுகையில், ‘பிரதமர் மோடிக்கு ஆதரவாக நாட்டு மக்கள் நிற்பதால், விரக்தியில் காந்தி இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுகிறார். வம்ச மரபைப் பின்பற்றும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் ஆட்சி செய்வது தங்களின் பிறப்புரிமை என்று நினைக்கிறார்கள். ஆனால் இன்று மக்கள் இந்த உரிமையைப் பறித்துள்ளனர். மேலும் மோடியின் பணியால் மக்கள் அவருக்கு ஆதரவாக நிற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

பாஜ தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,’ இந்தியா என்றால் இந்திரா, காங்கிரஸ் கட்சி தான் நாடு என்ற மாயையில் காங்கிரஸ் இன்னும் வாழ்கிறது. காங்கிரஸ் என்றால் நாடு அல்ல. இந்தியா என்றால் இந்திரா இல்லை. இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் முன்னேற்றத்தையும், செழுமையையும் அனுபவித்து வருகின்றனர். இவ்வாறு அவர் விமர்சனம் செய்தார்.

The post மோடி மீது விமர்சனம் ராகுல் விரக்தியில் பேசுகிறார்: பா.ஜ கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul ,BJP ,New Delhi ,Rahul Gandhi ,America ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை...