×

வாராப்பூர், பழையபாளையத்தில் ஜல்லிக்கட்டு 1,300 காளைகளுடன் போராடிய 550 வீரர்கள்

ஆலங்குடி: வாராப்பூர், பழையபாளையத்தில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 1,300 காளைகள் சீறி பாய்ந்தன. காளைகளை அடக்க 550 வீரர்கள் மல்லுக்கட்டினர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த வாராப்பூர் பாளையடி கருப்பர் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி, நெரிஞ்சிப்பட்டியில் இன்று நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் சோதனை நடத்தினர்.

இறுதியில் 600 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். புதுக்கோட்டை ஆர்டிஓ முருகேசன் உறுதிமொழி வாசிக்க வீரர்கள் எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. விழாவில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார். இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி, வெள்ளிக்காசு, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டன.

ஆலங்குடி டிஎஸ்பி தீபக் ரஜின தலைமையில் 107 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பழையபாளையத்தில் வரதராஜ பெருமாள் மற்றும் பட்டத்தளச்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில்700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ முருகேசன் துவக்கி வைத்தார். ஏடிஎஸ்பி பால்வண்ணநாதன் தலைமையில் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post வாராப்பூர், பழையபாளையத்தில் ஜல்லிக்கட்டு 1,300 காளைகளுடன் போராடிய 550 வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Old Palayam, Varapur ,Alangudi ,Old Palayam, Warapur ,Warapur ,
× RELATED ஜல்லிக்கட்டு வீரர் அடித்துக்கொலை