×

கம்பம் பகுதியை மிரட்டும் காட்டுயானையை பிடிக்க ‘ஆபரேஷன் அரிசிக்கொம்பன்’ இன்று ஆரம்பம்

* 3 கும்கிகள், மயக்க ஊசி நிபுணர்கள் தயார்
* முதுமலை பொம்மன் குழுவினரும் வருகை
* சமிக்ஞை மொழியில் பேசினால் வழிக்கு வரும்?

உத்தமபாளையம்:சண்முகா நதி அணையில் முகாமிட்டுள்ள அரிசிக்கொம்பன் யானையை பிடிக்க 3 கும்கிகள் ஏற்கனவே வரவழைக்கப்பட்ட நிலையில், முதுமலையை சேர்ந்த 4 பழங்குடியினர் வந்துள்ளனர். இன்று வனத்துறையினர் அரிசிக்கொம்பனை பிடிக்கும் ஆபரேஷனில் இறங்குகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரிசிக்கொம்பன் காட்டுயானை அட்டகாசம் செய்து வந்தது. இந்த யானையை கடந்த ஏப். 30ம் ேததி வனத்துறையினர் மயக்க ஊசி ெசலுத்தி பிடித்து, பெரியாறு புலிகள் சரணாலய வனப்பகுதிக்குள் விட்டனர். ஆனால், அரிசிக்கொம்பன் யானை, மாவடி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேதகானமெட்டு வனப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதியான மேகமலை மற்றும் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது.

வனத்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு சத்தம் எழுப்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கடந்த 27ம் தேதி தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டியது. டூவீலரில் வந்த பால்ராஜ் (65) என்பவரையும் தாக்கியது. தொடர்ந்து வனத்துறை ஜீப், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் தாக்கியது. பின்னர் அங்கிருந்து நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி தோட்டப்பகுதிகளின் வழியே சென்று நேற்று முன்தினம் இரவு ராயப்பன்பட்டி சண்முகா நதி அணை அருகில் உள்ள காப்புக்காடு என்ற இடத்தில் அடர்ந்த வனத்தில் நிலை கொண்டுள்ளது. யானையின் நடமாட்டம் குறித்து 12 வனத்துறை குழுவினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

மேலும் யானையை பிடிக்க, 3 கும்கி யானைகள், கம்பத்தில் தயார் நிலையில் உள்ளது. இன்று (மே 31), 3 கும்கிகளையும் காப்புக்காடு பகுதிக்குள் அழைத்து செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அரிசிக்கொம்பன் யானையை மயக்க ஊசி போட்டு, பிடிக்க 5 பேர் கொண்ட மயக்க ஊசி நிபுணர்களும் தயார் நிலையில் உள்ளனர். சுருளி அருவிக்கு ெசல்வதற்கு விதிக்கப்பட்ட தடை 3 நாட்களாக தொடர்கிறது. முதுமலை மட்டும் அல்லாமல், எங்கெல்லாம் யானைகள் திமிறி மிரட்டுகிறதோ, அங்கு யானைகளின் சமிக்ைஞ மொழிகளை பேசி மிக தைரியமாக நுழைபவர்கள் முதுமலை பழங்குடியினர் ஆவர். பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் நேற்றிரவு கம்பம் வந்துள்ளனர். இவர்கள் 4 பேரும் அரிசிக்கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர, கும்கி யானைகளுடன் செல்ல உள்ளனர். அரிசிக்கொம்பனை பிடிக்கும் மீதான ஆபரேஷன் இன்று (ேம 31) முதல் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

யானை தாக்கிய முதியவர் பலி; ரூ.5 லட்சம் நிவாரண நிதி
தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் கடந்த 27ம் தேதி புகுந்த அரிசிக்கொம்பன் யானை, டூவீலரில் வந்த டாஸ்மாக் கடை செக்யூரிட்டி பால்ராஜ் (65) என்பவரை தாக்கியது. உடனடியாக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட இவர், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த பால்ராஜ்க்கு பிச்சையம்மாள் (60) என்ற மனைவி, பாண்டீஸ்வரி (39), விஷ்ணு பிரியா (24) என 2 மகள்கள், முத்துப்பாண்டியன் என்ற மகன் உள்ளனர். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பால்ராஜின் உடலுக்கு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் பால்ராஜின் குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் பால்ராஜ் குடும்பத்தினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பால்ராஜின் குடும்பத்தினர் தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதற்கிடையே யானை தாக்கி உயிரிழந்த பால்ராஜ் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவி தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இந்த தொகையும் பால்ராஜின் குடும்பத்திற்கு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதியளித்தார். அமைச்சருடன் கலெக்டர் ஷஜீவனா, எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் ஆகியோர் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

The post கம்பம் பகுதியை மிரட்டும் காட்டுயானையை பிடிக்க ‘ஆபரேஷன் அரிசிக்கொம்பன்’ இன்று ஆரம்பம் appeared first on Dinakaran.

Tags : Operation ,Kompan ,Kumkis ,Mudumalai Pomman ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு...