×

பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு

சென்னை: நிலம் விற்பது தொடர்பான சிக்கல்களை தீர்த்து வைப்பதற்காக பெண்ணிடம் ரூ. 45 லட்சத்தை பறித்துச் சென்ற பா.ஜ. மாநில செயலாளர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். இவரது மகன் திருமணத்தில் அண்ணாமலை கலந்துகொண்டது பாஜவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வில்லிவாக்கம் 9வது தெருவை சேர்ந்தவர் நாராயணி. இவர் கடந்த 10ம் தேதி கொரட்டூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தனது பூர்வீக சொத்து 78 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை விற்பதற்காக நண்பர் சதீஷ் மற்றும் தரகர் பிரகாஷ்ராஜை அணுகினேன். சுமார் 5 கோடி மதிப்புள்ள நிலத்தை விற்பது தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தது. அதை தீர்த்து வைப்பதற்காக கமிஷன் அடிப்படையில் பா.ஜ. நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷ் (51) என்பவரை அணுகினோம். இந்நிலையில், கடந்த மாதம் வேறு ஒருவர் மூலம் சுமார் ரூ..5 கோடிக்கு நிலம் விற்கப்பட்டது. அதை தெரிந்துகொண்ட ரமேஷ் தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் (47) என்பவருடன் வீட்டிற்கு வந்து எனது கைப்பையில் இருந்த ரூ..45 லட்சத்தை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார் என கூறியிருந்தார். அதேபோல் தரகர் பிரகாஷ்ராஜ் கடந்த 18ம் தேதி கொரட்டூர் போலீசில் புகார் கொடுத்தார். அதில் மின்ட் ரமேஷ் மற்றும் கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் நேரில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்.இந்த புகார்களின் அடிப்படையில் கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷை கைது செய்தனர். மின்ட் ரமேஷின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை மதுரவாயலில் நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்ட் ரமேஷ் மற்றும் நாகர்கோவில் மகேஷ் மீது தலா2 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

The post பெண்ணிடம் ரூ.45 லட்சம் பறித்துச் சென்ற பாஜ மாநில செயலாளர் உள்பட இருவர் கைது: மகனின் திருமணத்தில் அண்ணாமலை பங்கேற்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,state secretary ,Annamalai ,CHENNAI ,
× RELATED கோவையில் தேர்தல் நடத்தை விதிகளை...