×

ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாட விரும்புகிறேன்: டோனி உருக்கம்

வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறுகையில், ‘நான் ஓய்வு முடிவை அறிவிக்க இது சிறந்த தருணமாகவும், நேரமாகவும் இருக்கும். ரசிகர்களுக்கு நன்றி என்று கூறிவிட்டு ஓய்வு பெறுவது எனக்கு எளிதாக இருக்கும். அதுவே மீண்டும் 9 மாதம் கடுமையாக உழைத்து விட்டு மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது கடினம் தான். ஆனால் என் உடல் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். சிஎஸ்கே ரசிகர்களிடமிருந்து கிடைத்த பெரும் அன்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாடுவது நிச்சயம் சிறந்த பரிசாக ரசிகர்களுக்கு இருக்கும். எனக்காக அவர்கள் காட்டும் அன்பு, உணர்ச்சி அனைத்தும் அவர்களுக்காக நான் ஏதேனும் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி பகுதி. முதல் வெற்றியின்போது மைதானம் முழுவதும் ரசிகர்கள் அமர்ந்து என்னுடைய பெயரை கத்தும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது.

என்னால் முடியும் போதெல்லாம் அவர்களுக்காக நான் விளையாட ஆசைப்படுகிறேன். நான் சாதாரண ரசிகனை போல் கிரிக்கெட் விளையாடுகிறேன். எந்த கோப்பையாக இருந்தாலும் அதற்கென சில சவால்கள் இருக்கும். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அழுத்தத்தை எதிர்கொள்வதில் வீரருக்கு வீரர் மாறுபடலாம். இளம் வீரர்களுக்கு சந்தேகம் குழப்பம் வரும்போதெல்லாம் அவர்களுடன் நாங்கள் உரையாடுவோம். ராயுடு பற்றி சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் இந்திய ஏ அணிக்காக விளையாடினோம். களத்தில் அவர் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பார். சுழற் பந்துவீச்சு வேகப்பந்து வீச்சு என இரண்டையும் ஒரே அளவில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் அவர். ராயுடு களத்திற்கு வந்தால் நிச்சயமாக ஏதாவது ஸ்பெஷலாக செய்வார் என்பது எனக்குத் தெரியும்’ என்றார்.

The post ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாட விரும்புகிறேன்: டோனி உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Tony Meltdown ,Dhoni ,Tony Urukum ,Dinakaran ,
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...