சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒன்றிய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். இதை மக்கள் நம்ப வேண்டும் என்றால் அவர் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் தலையங்கத்தைப் படித்து அதன்படி நடந்து கொள்ளலாமே? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், அந்த நாளிதழ் எதிர்க்கட்சிகளுக்குச் சொந்தமான நாளிதழ் இல்லையே என வினவியுள்ளார்.
கச்சா எண்ணையின் விலை குறைந்த காலத்தில்கூட அரசு செயற்கையாகப் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்திவைத்திருப்பதை அத்தலையங்கம் சுட்டிக் காட்டியிருக்கிறது. 2014 முதல் 2021 வரை மற்றும் அக்டோபர் 2022 முதல் இன்று வரை கச்சா எண்ணையின் விலை குறைந்து இருந்த போதும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையவில்லை, ஏன்? காரணம்: பெட்ரோல், டீசல் மீது கடுமையான, பொருந்தாத வரி மற்றும் செஸ் விதித்ததுதான் காரணம். இதை நாங்கள் சொன்னால் நிதி அமைச்சருக்குக் கோபம் வருகிறதே, ஏன்? என்று ப.சிதம்பரம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
The post சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததற்கு ப.சிதம்பரம் கண்டனம்..!! appeared first on Dinakaran.