×

உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை: அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம்..!

சென்னை: உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை என அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் பணியை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு 12/12/2012 அன்று உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பிறகு 12AA, 80G, CSR அங்கீகாரமும் முறையாகப் பெறப்பட்டது. அறக்கட்டளை பதிவு செய்யப்பட்ட நாள் முதல் கல்வி, மருத்துவ உதவிகள், தானியங்கிக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், அரசு குழந்தைகள் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள், அவசர ஊர்தி சேவை; நடமாடும் நூலகம், மக்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பூங்காக்கள் புதுப்பித்தல் போன்ற பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறது.

அறக்கட்டளை பெற்றுள்ள நன்கொடைகளின் விவரங்களையும், அறக்கட்டளையின் வாயிலாக நாங்கள் செய்துள்ள நலப்பணிகளுக்கான வரவு- செலவு கணக்குகளையும் முறையாக வருமான வரித்துறையிடம் சமர்ப்பித்து வருகின்றோம். அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் 27.05.2023 அன்று வெளிவந்த பதிவு, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் தவறாக சித்தரிக்கப்படுகிறது. ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் வெளிவரும் செய்திகளைப் போல், உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கு, எவ்விதமான அசையா சொத்தும் கிடையாது. மேலும் அமலாக்கத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் ரூபாய் 36.3 கோடி மதிப்பிலான சொத்து முடக்கத்திற்கும் எங்கள் அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இப்பொழுது அமலாக்கத்துறை முடக்கிய ரூபாய் 34.7 இலட்சத்திற்கான தகுந்த ஆவணங்களைக் கொடுத்து அதனை சட்டப்படி மீட்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை, முழுக்க முழுக்க மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை மட்டுமே கருத்தில் கொண்டு களப்பணியாற்றுகிறது. உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை என்றும் அறத்தின் வழி மட்டுமே நடக்கும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post உதயநிதி அறக்கட்டளைக்கு எவ்வித அசையா சொத்தும் இல்லை: அறக்கட்டளை அறங்காவலர் பாபு விளக்கம்..! appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi Trust ,Babu ,Chennai ,Trustee ,Dinakaran ,
× RELATED சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை...