×

கோவில்பட்டி அருகே பரிதாபம் நண்பர்களுடன் கண்மாயில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

கோவில்பட்டி, மே 30: கோவில்பட்டி அருகே நண்பர்களுடன் கண்மாயில் குளித்தவர் நீரில் மூழ்கி பலியானார். கோவில்பட்டி அருகே உள்ள பிச்சைத்தலைவன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜார்ஜ். இவரது மனைவி வனிதா. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஜார்ஜ் இறந்து விட்டார். இவர்களது மகன் சந்தீப்குமார், ஐடிஐ முடித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறை காரணமாக சந்தீப் குமார் கடந்த வாரம் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை அங்குள்ள கண்மாயில் நண்பர்களுடன் குளித்தார். அப்போது பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. மற்றவர்கள் வெளியே வந்து விட சந்தீப்குமார் வெளியே வரவில்லை. இதையடுத்து அவருடன் சென்றவர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சந்தீப்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை நாலாட்டின்புதூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. நண்பர்களுடன் கண்மாயில் குளித்தவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கோவில்பட்டி அருகே பரிதாபம் நண்பர்களுடன் கண்மாயில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Tags : Kanmail ,Kovilpatti ,Kanmai ,Pichaithalaivanpatti ,Koilpatti ,
× RELATED மானாமதுரை அருகே அழகாபுரி கண்மாயை தூர்வார வேண்டுகோள்