×

பாஜக 9 ஆண்டு ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு: காங்கிரஸ் சாடல்

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு ஆட்சி காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதாக குற்றசாட்டி காங்கிரஸ் கட்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கேவின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது அத்தியாவசிய பொருட்களின் விலையும், தற்போது அந்த பொருட்களின் விலையும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு ரூ.440-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.1,103-ஆக உயர்ந்துள்ளது. ரூ.71-ஆக இருந்த 1 லிட்டர் பெட்ரோல் விலை தற்போது ரூ.97-ஆகவும், ரூ.57-ஆக இருந்த 1 லிட்டர் டீசல் விலை தற்போது ரூ.90-ஆகவும் உயர்ந்துள்ளது என வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரூ.36-ஆக இருந்த 1 கிலோ அரிசி தற்போது ரூ.80-க்கும், ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எண்ணெய் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்படுவதையும் அந்த வீடியோவில் காங்கிரஸ் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொடிய பணவீக்கம் விகிதத்தால் கடந்த 9 ஆண்டுகளில் மக்களின் சம்பாத்தியத்தை பாஜக அரசு கொள்ளையடித்து விட்டதாக காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. அத்தியாவசியமான அனைத்தின் மீதும் ஜி.எஸ்.டி. பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்றும் அத்துடன் பட்ஜெட்டை பாழாக்கி வாழ்க்கையை கடினமாக்கி விட்டதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசு அச்சே-தின் என்ற நல்ல நாளில் தொடங்கி அமிர்தமான நேரத்தை நோக்கி செல்வதாகவும் காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

The post பாஜக 9 ஆண்டு ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்வு: காங்கிரஸ் சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Delhi ,Bharatiya Janata Party ,
× RELATED பாஜக அரசின் கையாலாகாத தன்மை : ப.சிதம்பரம் தாக்கு